உண்மை நிலை என்ன?
'இயற்கையானது’ என்பதைக் குறிக்கும் 'ஆர்கானிக்' எனும் வார்த்தைக்கு மரியாதை பெருகிவருகிறது. 'இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்ண வேண்டும். அதுதான் உடலுக்கு நல்லது’ என்கிற விழிப்பு உணர்வின் வெளிப்பாடுதான் காரணம். இது வரவேற்கத்தக்க விஷயமே! ஆனால், இவை பற்றி மக்களுக்கு சந்தேகங்களும் உள்ளன.
'ஆர்கானிக் உணவுகளை எங்கு வாங்குவது?’, 'அவை இயற்கை விவசாயத்தில் விளைந்ததுதான் என்று எப்படி உறுதிபடுத்திக்கொள்வது?’, 'ஆர்கானிக் உணவுப் பொருட்கள் நமக்குச் செய்யும் நன்மைகள் என்னென்ன?’, 'அவற்றுக்கு நான் கொடுக்கும் விலை நியாயமானதுதானா?’ இப்படி பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகப் பேசுகிறார்கள், இந்தத் துறை சார்ந்த நிபுணர்களும், வணிகர்களும்!
ஏன் வேண்டும் ஆர்கானிக் உணவுகள்?
இதைச் சொல்லும்போது, 'நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், முகத்தில் பூசும் க்ரீம் என எல்லாவற்றிலும் ரசாயனம் கலந்துவிட்ட நிலையில், உணவை மட்டும் இயற்கையானதாக எடுத்துக்கொள்வது எந்த அளவுக்குப் பயன் தரும்?’ என்கிற கேள்வி எழக்கூடும். காற்றின் மூலம் குறைந்த அளவு நஞ்சே நம் உடலில் சேரும்; குடிக்கும் தண்ணீரைச் சுத்தப்படுத்திக் குடிக்கலாம்; ரசாயன க்ரீம்கள் சருமத்தில்தான் வினைபுரியும். ஆனால், உணவு என்பது, நம் உயிருக்கும் ஆரோக்கியத்துக்கும் அத்தியாவசியமானது. காற்று, தண்ணீர் போன்ற காரணிகளால் ஏற்படும் நோய்களுடன் மல்லுக் கட்டும் எதிர்ப்புச் சக்தியை நம் உடலுக்குத் தரவல்லது, உணவுதான்! எனவே, அதிலும் ரசாயனத்தைக் கலக்காமல் இயற்கையை நாடுவது, மற்ற பிரச்னைகளில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய அரணாக அமையும்.''
இயற்கை விளைபொருட்களை எப்படிக் கண்டுபிடிப்பது?
இயற்கையை உறுதிபடுத்துவது எப்படி?
ஆர்கானிக் கடைகளில், அவர்கள் தரும் காய்கறிகள் உண்மையிலேயே இயற்கை விளைச்சலில் அறுவடையானவைதானா என்று உறுதிபடுத்திக்கொள்வது அவசியம்.கடைக்காரர் களிடம், 'அந்த உணவுப் பொருட்கள் எந்த ஊரில் இருந்து வருகின்றன? எந்த விவசாயியிடம் இருந்து கொள்முதல் ஆகின்றன? அந்த விவசாயி எந்த செக்கில் எண்ணெய் எடுக்கிறார்?’ இப்படிப்பட்ட கேள்விகளை அவசியம் முன்வையுங்கள். பதில் சொல்லத் தயங்கும் அல்லது மறுக்கும் கடைகளை நம்பாதீர்கள். அதேபோல, ஆர்கானிக்கில் பிராண்ட்களுக்கும் முக்கியத்துவம் தரத்தேவையில்லை. அதன் ஆரம்பப்புள்ளி நல்ல நோக்கத்துடன், நேர்மையாக இருந்தாலும், இடையில் கடந்து வரும் பாதையில் பிழை நேரலாம். முடிந்தவரை, விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்யும் அங்காடிகளைத் தேர்வு செய்யலாம். கடை நடத்துபவர் மீதான உங்கள் நம்பிக்கையே தரத்தை உறுதிபடுத்தும்.''
ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறதே?
ஆகவே மக்களே... நம் கைகளில்தான் இருக்கிறது, நாளைய தலைமுறைக்கான நஞ்சற்ற உணவு!
நம்பி வாங்கலாம் சிறுதானியம்!
இன்றைய சூழலில் பெரும்பாலான விளைபொருட்களும் ரசாயன முறையில்தான் விளைவிக்கப்படுகின்றன. இதனால், இயற்கை என்று சொல்லி விற்கப்படும் பொருட்களை எதை நம்பி வாங்குவது என்கிற தயக்கமே பலரிடமும் இருக்கிறது. இதற்கு நடுவே, "சற்றும் தயங்காமல் சிறுதானியங்களை நம்பிக்கையோடு வாங்கலாம்... அவை முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கப்படுபவை என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது'' என்று சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த 'இயற்கைப் பிரியன்' ரத்தின சக்திவேல். இவர், சமைக்காமலேயே அனைத்துவிதமான உணவுகளையும் உருவாக்குவதில் புகழ்பெற்றவர்.
காலையில் இட்லி, மதியம் சாப்பாடு, இரவு தோசை என மூன்று நேரமும் அரிசி உணவுகளைதான் சாப்பிடுகிறோம். இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் இந்த நிலை. இதனால்தான் சர்க்கரை வியாதிக்காரர்கள் இங்கே அதிகம் இருக்கிறார்கள். இதற்காக சிறுதானிய வகைகளை மூன்று நேரமும் சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. தினமும் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம். தாது உப்புகள், நார்ச்சத்து, புரதம், விட்டமின் என எல்லா சத்துகளும் இவற்றில் அதிகம் இருக்கின்றன. சிறுதானியத்தை கூழாகவோ, கஞ்சியாகவோதான் குடிக்க வேண்டும் என்பது கிடையாது. பிரியாணி, விதவிதமான ஸ்நாக்ஸ் எல்லாம் சிறுதானியத்தில் செய்யமுடியும்'' என்று நம்பிக்கையூட்டுகிறார் ரத்தின சக்திவேல்.
அறிந்துகொள்வது எப்படி?
இயற்கையில் விளைந்த பொருட்களுக்கு, அவற்றுக்கென உள்ள பிரத்யேக மணம் இருக்கும். இதை வைத்தும் கண்டறியலாம். இவற்றின் சுவையும் அருமையாக இருக்கும். இதை வைத்தும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
அவல் வாங்கும்போது, பளீர் என்று பார்த்து வாங்காதீர்கள். இயற்கையான முறையில் விளைந்த அரிசியில் தயாரிக்கப்படும் அவல், பழுப்பு நிறத்தில்தான் இருக்கும்.
இது நல்லெண்ணெய்தானே?!
'நல்ல அனுபவம் இருந்தாதான் இயற்கையில விளைஞ்சதுக்கும் ரசாயனத்துல விளைஞ்சதுக்கும் உடனே வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். குறிப்பா, விவசாயம் சாராத மக்களுக்கு இதைக் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். இயற்கை பழங்களோ, காய்கறிகளோ அதுக்குனு உரிய மணத்தில் இருக்கும். உதாரணத்துக்கு ஆப்பிள், மாம்பழம்னா... அததுக்குரிய பிரத்யேக மணம் வீசும். காய்கறிகள்னா... நல்லா பச்சை வாசனை வீசும். சுவையும் மிகுதியா இருக்கும்.
இயற்கை முறையில தயாரிக்கப்பட்ட வெல்லம், தொண்டைக்குள் இறங்குற வரைக்குமே இனிப்பா இருக்கும். ரசாயன முறையில தயாரிச்ச வெல்லம்னா... கொஞ்சம் உப்பு கரிக்கும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழம், காய்கறிகள்ல வெளிப்பகுதி பளபளப்பா இல்லாம, வடிவமும் ஒரு ஒழுங்குல இல்லாம இருக்கும். பூச்சிகள்கூட கடிச்சிருக்கும். ஆனா, உள்ள இருக்கிற சதைப்பகுதி பாதுகாப்பா இருக்கும். அதேசமயம், ரசாயனத்துல விளைஞ்ச பொருட்கள், வெளியில பார்க்க அழகா இருக்கும். உள்பகுதி அழுகிப் போயி, சுவையே இல்லாம இருக்கும்.
எண்ணெய் பொருட்கள் விலை குறைவா கிடைச்சா... அது கலப்படம்னு புரிஞ்சுக்கலாம். உதாரணத்துக்கு எள்ளோட விலை அதிகம். இதை செக்கில் ஆட்டி எண்ணெயாக கொண்டு வரும்போது, விலை அதிகமாத்தான் இருக்கும். ஆனா, எள் விலையைவிட குறைவான விலைக்கு நல்லெண்ணெயைத் தர்றாங்க. இது எப்படி சாத்தியம்? எண்ணெயைப் பொறுத்தவரை அதுக்கான இயற்கை குணங்கள் எல்லாத்தையும் சுவையூட்டிகள், ரசாயனம் மூலம் கொண்டு வந்து, கண்ட எண்ணெயிலயும் கலந்து விற்பனை செய்துட்டிருக்காங்க'' என்று அதிர வைக்கிறார் முரளி.
"6 கிலோ... 10 கிலோவுக்கு இணை!''
"இயற்கை விளைபொருட்களின் விலை அதிகம் என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது. இது தவறான கருத்து. நீங்கள் ரசாயனத்தில் விளைந்த அரிசியை 10 கிலோ வாங்க வேண்டியிருந்தால், இயற்கை முறையில் விளைந்த அரிசியை 6 முதல் 7 கிலோ வாங்கினாலே போதுமானதாக இருக்கும். இதுவே 10 கிலோ அரிசிக்கு இணையான சாதத்தைத் தரும். இதை ஒப்பிடும்போது, இயற்கை அரிசியின் விலையும் கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும்'' என்கிறார் திருநெல்வேலி, முருகன் குறிச்சியில் இயற்கை அங்காடி நடத்திவரும் கோமதி நாயகம்.
நஞ்சில்லா உணவு கோட்பாட்டுக்கு உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete