Sep 19, 2014

மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்ட சிப்ஸ் நிறுவனத்துக்கு சீல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


மொடக்குறிச்சி, செப். 19:
மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றியும் சுகாதாரமற்ற முறையிலும் செயல்பட்ட சிப்ஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முள்ளாம்பரப்பு அசோகபுரத்தில் தனியார் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுகாதாரமற்ற முறையிலும் அனுமதியின்றியும் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டுவருவதாக ஈரோடு உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கருணாநிதிக்கு புகார் வந்தது.
இதனையடுத்து அதிகாரி டாக்டர் கருணாநிதி தலைமையில் அலுவலர்கள் எட்டிக்கண், கதிர்வேல், மணி, முருகேசன், சென்னியப்பன், ராமசாமி ஆகியோர் நேற்று அந்த குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையில் அனுமதியின்றி அந்த நிறுவனம் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அங்கு சுகாதாரமற்ற முறையில் மரவள்ளி சிப்ஸ் தயாரிப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள சிப்ஸ், ஒரு டன் குச்சி கிழங்கு உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சிப்ஸ் நிறுவன குடோனுக்கு சீல் அமைத்தனர்.
உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அதிகாரி கருணாநிதி கூறுகையில், அனுமதியின்றி சிப்ஸ் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வந்துள்ளது. பறிமுதல் செய்த சிப்ஸ் வகைகைள கோவை உணவு பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு அனுப்பி அறிக்கை பெறப்படும். ஆய்வு முடிவு கிடைக்க 15 நாட்கள் ஆகும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment