Sep 19, 2014

நாமக்கல் அருகே சேகோ ஆலையில் இறக்கிய ஸ்டார்ச் மாவில் கலப்படமா?


சேந்தமங்கலம், செப்.19&
நாமக்கல் தாலுக்கா செல்லப்பம்பட்டியை தலைமையிடமாக கொண்டு சுமார் 40க்கும் மேற்பட்ட சேகோ தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகோ தொழிற்சாலையில் மக்கா சோளம், மரவள்ளி கிழங்குகளை அரைத்து ரசாயன கலப்படம் செய்யாமல் சுத்தமான முறையில் ஜவ்வரிசி தயாரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு செல்லப்பம்பட்டி, நாமகிரிபேட்டை, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கலப்படம் இன்றி ஜவ்வரிசி தயாரிப்பதை கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து செல்லப்பம்பட்டியில் நேற்று நள்ளிரவில் 2 சேகோ தொழிற்சாலைகளில் கலப்படம் செய்யப்பட்ட ஸ்டார்ச் மாவு ஆத்தூரில் இருந்து 2 லாரிகள் மூலம் சேகோ ஆலைக்கு கொண்டு வரப்பட்டதாக தமிழ்நாடு விவசாய சங்கத்திற்கு தகவல் வந்தது. தகவல் அறிந்த விவசாய சங்கதினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு அங்கு விரைந்து வந்து லாரிகளை சுற்றி வளைத்தனர். பின்னர் இதுகுறித்து நாமக்கல் ஆர்டிஓ காளிமுத்து, தாசில்தார் சுகுமார், நாமக்கல் தாலுக்கா ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கத்தினர், மற்றும் நள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதையடுத்து லாரிகளில் கொண்டுவரப்பட்ட ஸ்டார்ச் மாவு சுத்தமானதா அல்லது கலப்படமானதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாதிரி மாவை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நள்ளிரவில் சேகோ ஆலையில் விசாரணை நடந்ததில் சேகோ உற்பத்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment