Jun 25, 2014

நகராட்சிக்குட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பொள்ளாச்சி, ஜூன் 25:
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை மற்றும் வணிக வளாக கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் போதை பாக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து கொண்டிருப்பதாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, நேற்று பொள்ளாச்சி தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் நகரில் உள்ள பல கடைகளில் சோதனை செய்தனர்.
நகரில் சத்திரம் வீதி, தேர்நிலை, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பல கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் பான்மசாலா பாக்கெட்டு பெட்டி பெட்டியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 25 கடைகளில் பான்மசாலா மற்றும் போதைபாக்கு பாக்கெட்டுகள் மொத்தம் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
அது போல், நகரில் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட்டிற்குட்பட்ட கடைகளில் சுகாதார பிரிவு அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். 25 கடைகளில், 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் மொத்தம் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டு நகராட்சிக்குட்பட்ட நல்லூர் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

No comments:

Post a Comment