Jun 25, 2014

காரைக்குடி பகுதியில் தடையை மீறி பான் மசாலா விற்பனை ஜோர் ரெய்டு நடத்த அதிகாரிகள் தயக்கம்


காரைக்குடி, ஜூன் 25:
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அரசின் தடையை மீறி பான் மசாலா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள தயக்கம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியுடன் பான்மசாலா, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக் கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப் பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதியுடன் விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்திருந்தார். ஆனால் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இவற்றை பறிமுதல் செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய அலுவலர்கள் இல்லாததால் அதிரடி ரெய்டு நடந்த இத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மாநில அளவில் 13 சதவீதம் பேர் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். தவிர பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூகஆர்வலர் செந்தில் கூறுகையில். மாநில அளவில் தினமும் 4 கோடிவரை இப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.100 கோடிவரை வருவாய் கிடைப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. பான்மசலா, புகையிலையை பயன்படுத்துவதால் புற்று நோய், சிறுநீரகம், நரம்பு மண்டலம், மூளை பாதிப்பு உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட்ட பாக்கெட் ரூ. 10 முதல் 15 வரையும், சற்று பெரிய அளவிலான பாக்கெட் ரூ 30 வரையும் கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். கிராமப்பகுதிகளில் கடைகளில் நேரடியாகவே விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 420, 120, ஜர்தா போன்ற பீடா வகை களையும் தடை செய்ய வேண்டும் என்றார்.
மருத்துவர் ஒருவர் கூறுகையில். பான்மசாலா, வாயில் மெல்லும் உணவு பொருட்களில் காரியம், சோடியம் கார்பனேட், அமோனியா, அமோனியம் கார்பனேட், நைட்ரஸ் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் அதிக அளவில் உள்ளன. நீண்ட காலம் இப்பொருட்கள் பயன்படுத்துவோர்களுக்கு பற்கள், ஈறுகள் சிதைந்து போகும், வாயில் புகையிலையை வைப்பதால் அரித்து துளை ஏற்படும் வாய்ப்புள்ளது. இப் பழக்கத்தை திடீர் என நிறுத்தினால் ஏற்படும் பாதிப்பு விரைவில் சரியாகி விடும் என்றார்.

No comments:

Post a Comment