Jun 1, 2015

நம் உணவில் நஞ்சு கலந்திருக்கிறது!

சற்றே பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்திருக்கும் படம்... திருமணத்துக்குப் பிறகு தங்கள் கனவுகளைத் தொலைக்கும் பெண்களின் அடையாளச்சிக்கல் பற்றிப் பேசும் படம் என்பதை எல்லாம் தாண்டி ‘36 வயதினிலே’ இன்னொரு விஷயத்தில் எல்லோரையும் கவனிக்க வைத்திருக்கிறது... அது உணவில் ஒளிந்திருக்கும் அபாயம்!
ரசாயன உணவுகளின் அபாயத்தை ஊடகங்களும் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வெகுஜன மக்களிடம் ஆர்கானிக் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை இன்னும் பரவலாகக் கொண்டு சேர்த்திருக்கிறது ‘36 வயதினிலே’. பறிப்பதற்கு ஒரு நாள், லாரியில் 2 நாள், கடையில் 2 நாள், நம் வீட்டு ஃப்ரிட்ஜில் 4 நாள் என்று வாரக்கணக்கில் ஒரு காய் ஃப்ரெஷ்ஷாக இருப்பதன் பின்னணியில் எண்டோசல்ஃபான் போன்ற பல அபாயகரமான ரசாயனங்கள் இருப்பதையும், இன்னொரு பக்கம் ஆர்கானிக் என்று நம்ப வைப்பதற்காக காய்கறிகள், கீரைகள், பழங்களை சேற்றில் புரட்டி வைப்பது, ஈக்களை வரவழைப்பதற்கு ஸ்பிரே அடிப்பது போன்ற மோசடிகள் செய்வதையும் இந்தத் திரைப்படம் உணர்த்தியிருக்கிறது. 
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நேரத்தில் ஆர்கானிக் தயாரிப்புகள் பற்றிய சில சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டோம்…
‘‘ஆர்கானிக் என்ற பெயரில் மக்கள் இயற்கைக்குத் திரும்பிக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க, ஆரோக்கியமான ஒரு மாற்றம். ஒரு பூச்சியைக் கொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் மருந்தையோ, உரத்தையோ வைக்கிறார்கள். பூச்சியின் உடலமைப்புக்கு ரசாயனம் உயிரைப் பறிக்கும் அளவு வீரியமானதாக இருக்கிறது. மனிதர்களின் உடலமைப்பு பூச்சிகளைவிட பலமடங்கு மேம்பட்டது என்பதால், உடனடியாக அந்த பாதிப்பு நமக்குத் தெரிவதில்லை. ஆனால், காலப்போக்கில் சாதாரண தோல் அரிப்பு முதல் புற்றுநோய் வரை என்ன நோய்கள் வேண்டுமானாலும் வரலாம். ’
எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. எனக்கு ஏன் இந்த நோயெல்லாம்’ என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். அதற்குப் பின்னணியில் முக்கிய காரணியாக இருப்பது நச்சு கலந்த நம் உணவுகள்தான்’’ என்கிறார் ‘நம் மண்’ அமைப்பை உருவாக்கி, இயற்கை விவசாயம் செய்து வரும் இளைஞரான ஆனந்தராசு. 
‘‘படிக்கும்போதே வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ, பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கோ வேலை பார்க்கக் கூடாது. தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்திலேயே விவசாயத்துக்கு வந்தேன்'' என்கிறார் ஆனந்தராசு. ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாதான் ‘நம் மண்’ என்ற பெயரையே வைத்தார்’ என்கிறவரிடம், ‘இயற்கை விளைபொருட்களின் விலை அதிகமாக இருப்பது ஏன்’ என்று கேட்டோம்.
‘‘இரண்டாம் உலகப் போர் நடந்த 1945ம் ஆண்டுக்குப் பிறகுதான் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகமாக ஆரம்பித்தது. ரசாயன உரங்களால் மலடாகிப் போன மண்ணை இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டுமானால் அதற்கு ஒன்றரை ஆண்டுகளாவது தேவைப்படும். இந்த ஆரம்பநிலையில் விவசாயிகளுக்குப் பெரிய லாபம் இருக்காது. மண் தயாரான பிறகே மகசூல் அதிகமாகி லாபம் வரும். இப்போது ஆரம்ப நிலையிலேயே பெரும்பாலான விவசாயிகள் இருப்பதால் விலை அதிகமாக இருக்கிறது. 
ஐந்தரை லட்சம் ஏக்கர் விவசாயம் நடக்கும் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே இயற்கை விவசாயம் நடக்கிறது. மக்கள் இயற்கை விளைபொருட்களைத் தேடிச்செல்வது அதிகமானால், விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். உற்பத்தி அதிகமாகும்போது தானாகவே விலை குறையும்’’ என்கிறார் ஆனந்தராசு.இயற்கை வேளாண் பொருட்களை வீடு தேடி கொண்டு செல்லும் நிறுவனத்தை நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த பிரசாத் இயற்கை விளைபொருட்கள் வாங்கும் வழிகளைச் சொல்கிறார்.
‘‘ரசாயனங்களால் தயாராகும் பொருட்கள் கவர்ச்சியாக இருக்கும். உதாரணத்துக்கு, காலிஃப்ளவரில் அதற்கே உரிய மஞ்சள் நிறம் கொஞ்சம் இருக்கும். ரசாயனம் கலந்த காலிஃப்ளவரோ ‘பளிச்’ வெண்மையாகக் காட்சியளிக்கும். இந்த வெண்மைக்காக பல முறை பூச்சி மருந்தில் காலிஃப்ளவரை நனைத்து எடுப்பார்கள். செயற்கை விளைபொருட்களின் விலை ஏறி, இறங்கிக்கொண்டே இருக்கும். இயற்கை விளைபொருட்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், வருடம் முழுவதும் நிலையானதாகவே இருக்கும். 
மக்களின் விழிப்புணர்வைத் தவறாகப் பயன்படுத்தி, ‘ஆர்கானிக்’ என்ற பெயரில் போலி வியாபாரங்களும் நடந்து வருகின்றன. நாம் ஏமாறாமல் இருக்க, நம்பகமான ஆர்கானிக் கடைகளிலும், வியாபாரிகளிடமும் வாங்குவது நல்லது. இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கு சென்று தேவைப்படும் அரிசி, காய்கறி, பழங்கள், கீரைகளைச் சொல்லிவிட்டால் வீடு தேடி வந்து கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் விவசாயப் பொருட்களின் விலை இடைத்தரகர்கள், வாகனப் போக்குவரத்து என்ற இரண்டு இடத்தில்தான் அதிகமாகிறது. 
நேரடியாக விவசாயிகளிடமே வாங்கும்போது இன்னும் புதிதாகவும் வாங்க முடியும். எக்ஸ்ட்ரா செலவுகளையும் தடுக்கலாம்’’ என்கிற பிரசாத், சிறுதானியங்கள் பற்றியும் பேசுகிறார்.‘‘சிறுதானியங்கள் பெரும்பாலும் ரசாயனங்களோ, பூச்சிக்கொல்லிகளோ இல்லாமலேதான் விளைகின்றன. அதனால், சிறுதானியங்களை ஆர்கானிக் என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படி சொல்வதால் தவறும் இல்லை. பிராண்டுகளை பொறுத்த வரை இயற்கை விளைபொருட்களை மொத்தமாக வாங்கி தங்களது பெயரில் பிராண்டாக உருவாக்கி சிலர் விற்கிறார்கள். இதுவும் மக்களிடம் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவதற்காகத்தான்’’ என்கிறார். 
இயற்கை உணவுகள் ஏன் அவசியம்? இந்தக் கேள்விக்கு இயற்கை மருத்துவரான மனு பிரதீஷ் பதிலளிக்கிறார்.‘‘இன்று நம் சமூகத்தில் ஏற்படும் 90 சதவிகித நோய்களுக்கு உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பருமனுக்கு அதிக உணவு சாப்பிடுவதுதான் காரணம் என்று நினைப்போம். ஆனால், ரசாயன உணவுகளால் உணவில் இருந்து மக்னீசியம், செலினியம் போன்ற மைக்ரோ மினரல் சத்துகள் கிடைக்காதபோது, நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறாமல் அப்படியே கொழுப்பாக தங்கிவிடும். அதேபோல உணவின் மூலம் நமக்குள் செல்லும் ரசாயனங்கள் ஏற்கெனவே இருக்கும் ஹார்மோன்கள் போலவே தன்னை காட்டிக் கொள்ளும். இதை ’ஹார்மோன் மிமிக்ரி’ என்று சொல்வார்கள். 
இன்சுலின் ஹார்மோன் போல ஒரு ரசாயனம் நடந்துகொள்ளும்போது, தனது இன்சுலின் சுரப்பைக் கணையம் குறைக்கும். இதனால் நீரிழிவு ஏற்படலாம். ஆண்களுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டிரான் பெண் ஹார்மோனாக மாறுவதால் முடி உதிரும், பெண் தன்மை உருவாகும், மார்பகம் வளரும், தாம்பத்தியத்தில் விருப்பம் இருக்காது. பெண்களுக்கு ஆண் தன்மை ஏற்பட்டு முகத்தில் ரோமங்கள் வளரும், மாதவிலக்கு கோளாறுகள் ஏற்படும். 
இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கும் கறவை மாடுகளுக்கும் ஆன்டிபயாடிக் நிறைய கொடுப்பார்கள். இந்த ஆன்டிபயாடிக் நம் உடலுக்குள் வந்தால், நம்முடைய நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து, உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகமாகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மூளையில் நம் மனநலத்தைத் தீர்மானிக்கும் நியூரோடிரான்ஸ்மீட்டரை உற்பத்தி செய்வதில் குடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசாயன உணவுகளால் இந்த நியூரோடிரான்ஸ்மீட்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மனநலக் கோளாறுகள் உண்டாகும். 
நம் உடலுக்குள் தேவையற்ற ரசாயனங்கள் செல்வதால் ‘மெட்டாபாலிக் ஸ்ட்ரெஸ்’ என்கிற தேவையற்ற அழுத்தத்தை நம் உடலின் உள்ளுறுப்புகள் சந்திக்கின்றன. ரசாயன உணவுகள் இறுதியில் அமிலமாக மாற்றமடைவதால், நம் உடலின் அமில காரத்தன்மை சமன் குலைந்து நோய்கள் நிச்சயம் உருவாகும்.
சமீபத்தில் தர்பூசணியில் சிவப்பு நிறத்துக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருள் புற்றுநோயை உருவாக்குபவை என்று பரபரப்பாக செய்திகள் வந்தது நினைவிருக்கலாம். இது ஓர் உதாரணம்தான். எல்லா நோய்களையும் உணவினால் குணப்படுத்த முடியும் என்பதால்தான், ‘உணவே மருந்து’ என்று சொன்னார்கள். அந்த உணவை இயற்கையான உணவாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் ஆரோக்கியம் என்றும் நம்மை விட்டு விலகாது’’ என்கிறார் மனு பிரதீஷ். 
‘உணவு தானியங்கள் கெட்டு விஷமாகிப் போவதால், இயற்கைக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகா உதிர்த்த வார்த்தைகள் இன்றைய காலத்தின் கட்டாயம்!பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட காய்கறிகளால், காலப்போக்கில் சாதாரண தோல் அரிப்பு முதல் புற்றுநோய் வரை என்ன வேண்டுமானாலும் வரலாம்.
ஆர்கானிக் பொருட்களை கண்டுபிடிப்பது எப்படி?
ரசாயனம் கலந்த உணவுகள் பார்ப்பதற்கு அதீத நிறத்துடனும், கவர்ச்சியான தோற்றத்துடனும் இருக்கும். இயற்கை விளைபொருட்கள் அதற்குரிய நிறத்தில்தான் இருக்கும். அதிக ஃப்ரெஷ்னஸ் இருக்காது. இயற்கை விளைபொருட்களின் மேல் பூச்சி அரிக்கும். ரசாயனப் பொருட்களில் விஷம் இருப்பதால் பூச்சிகள் அண்டாது. இயற்கை விளைபொருட்களில் நல்ல சுவை இருக்கும். ரசாயனப் பொருட்களில் சுவை இருக்காது. என்னதான் ரசாயனம் கலந்து பாதுகாத்தாலும், இயற்கை வேளாண் பொருட்களைவிட 20 முதல் 30 சதவிகிதம் வரை ரசாயன உணவுப் பொருட்களுக்கு ஆயுள் குறைவுதான். 
பேக்கிங் செய்யப்பட்ட ஆர்கானிக் பொருட்களின் மேல், அதன் தரத்தை உறுதிப்படுத்து வதற்காக Organic Farming Association of India அமைப்பின் OFAI என்ற லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். இது அமெரிக்காவில் USDA என்றும், ஜப்பானில் JAS என்றும் நாடுகளுக்குத் தகுந்தாற்போல மாறுபடும். 3 ஆண்டுகளுக்கு மேல் இயற்கை விவசாயம் செய்கிற நிலத்திலிருந்து விளைவிக்கப்படுகிற பொருட்களுக்குத்தான் 100% ஆர்கானிக் என்று லேபிள் ஒட்டுவார்கள். 90%, 95% என்று குறிப்பிடுவதெல்லாம் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல!
உணவு தானியங்கள் கெட்டு விஷமாகிப் போவதால், இயற்கைக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை!
உணவே விஷமா?
உலக அளவில் தடை செய்யப்பட்ட Carbaryl, Malathion, Acephate, Dimethoate, Chlorpyrifos, Lindane, Quinalphos, Phosphomidon, Carbendazim, Tridemorph, Pretilachlor, Glyphosate போன்ற பல பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். உணவு என்ற பெயரில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது இந்த விஷங்களைத்தான். இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் www.whatsonmyfood.org, www.indiaforsafefood.in போன்ற இணையதளங்களைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment