Aug 30, 2013

3500 டன் அழுகிய பட்டாணியை தமிழகத்தில் விற்க முயற்சி தூத்துக்குடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடிப்பு ரூ. 6 கோடி மதிப்பு பட்டாணியை அழிக்க திட்டம் குடோனுக்கு சீல் வைப்பு

தூத்துக்குடி:அழுகிய நிலையில் உள்ள 6 கோடி மதிப்புள்ள பட்டாணியை தமிழகத்திற்குள் விற்பனை செய்வதற்காக முயற்சி செய்ததை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு நோயை உருவாக்கும் வகையிலான பொருட்களை பயன்படுத்த முயன்றதால் அந்த குடோனுக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் செல்போன் எண்ணுக்கு தகவல் வந்தது. அதில் பைபாஸ் ரோடு அருகே உள்ள குடோன் ஒன்றில் இருந்து மிக மோசமான அளவிற்கு துர்நாற்றம் வீசிக் கொண்டிருப்பதாகவும், அங்கிருந்து பொருட்களை எடுத்து செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த தகவலை கலெக்டருக்கு நியமன அதிகாரி தெரிவித்தார். உடனடியாக ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ஜெகதீஸ்சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமகிருஷ்ணன், சந்திரமோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் குடோன் ஒன்றுக்குள் சென்று சோதனை செய்தனர்.
குடோனுக்குள் மலைபோல் முளை வந்த பட்டாணி குவிக்கப்பட்டிருந்தது. இது தவிர அதிகமான சாக்கு மூடைகளிலும் அவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் சாரா. இவருக்கு சொந்தமான ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் வாடகை குடோன் ஒன்றில் செயல்பட்டு வருகிறது. அக்ரோ இண்டஸ்டீரிஸ் என்னும் பெயரில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிறுவனத்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ்குப்தா என்பவர் மேலாளராக இருந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து சமீபத்தில் கப்பல் ஒன்றில் இருந்து பெஸ்பிரி என்று சொல்லப்படுகிற உணவுக்கு பயன்படுத்தக் கூடிய பட்டாணி மொத்தம் 3 ஆயிரத்து 500 டன் வந்துள்ளது. கப்பலில் பட்டாணி கொண்டு வரும் போது கப்பலுக்குள் தண்ணீர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக தண்ணீரில் நனைந்த பட்டாணி, நனையாத பட்டாணி என்று இரண்டு பிரிவாக எடுத்து வைத்து விற்பனைக்கு கொண்டு செல்ல தயாராகியதாக கூறப்படுகிறது.
அதற்குள் இந்த தகவல் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையிலான குழுவினருக்கு கிடைக்க அவர்கள் அதனை குடோனில் இருந்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தலைமையிலான குழுவினர் குடோனுக்கு சென்று விசாரித்த போது முதலில் முன்னுக்கு பின் முரணாக அவர்கள் தகவலை அங்குள்ளவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்ட போது தான் உண்மை வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
மொத்தம் 3 ஆயிரத்து 500 டன் பட்டாணியில் சுமார் 2 ஆயிரத்து 500 டன் பட்டாணி முழுமையாக தண்ணீரில் நனைந்து விட்டதால் பட்டாணி மேல் முளை வந்து விட்டது. முளை வந்து நாட்கள் கடந்து விட்டதால் தான் மோசமான துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இதனை மக்களுக்கு விற்பனை செய்வதற்கு தான் ஏற்பாடு செய்துள்ள விபரத்தை ஆய்வில் அதிகாரிகள் கண்டுபிடித்ததால் அந்த குடோனுக்கு உடனடியாக கலெக்டர் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து ஜெகதீஸ்சந்திரபோஸ் கூறுகையில், கொடிய நோய்களை உருவாக்க கூடிய கெட்டு போன துர்நாற்றம் வீசிய பட்டாணியை விற்பனை செய்ய முயற்சித்த போது கண்டுபிடித்துள்ளோம். இதன் மதிப்பு 6 கோடி ரூபாயாகும். இதில் முளை வந்த பட்டாணி, முளை வராமல் உள்ள பட்டாணி இரண்டையும் சேம்பிள் எடுத்துள்ளோம்.
சென்னை கிண்டியில் உள்ள நுண்ணுயிர் பகுப்பாய்வு மையத்திற்கு இதன் சேம்பளை அனுப்பி வைத்து அங்கு ஆய்வு செய்யப்படுகிறது. அவர்கள் ஆய்வு முடிந்து அதற்கான அறிக்கையை எங்களுக்கு அனுப்பிய பிறகு கலெக்டரிடம் ஆலோசனை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மலை போல் குவிக்கப்பட்டு முளை வந்து மிக மோசமான நிலையில் உள்ள பட்டாணியை சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்தினர் செலவிலே அழிக்க வேண்டும். மீதியுள்ள ஆயிரம் டன் முளை வராத பட்டாணியின் நிலை குறித்து சென்னையில் இருந்து வரக் கüடிய சோதனை அறிக்கையை பார்த்த பின்னர் தான் அதில் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை குடோன் சீல் வைக்கப்படும். உள்ளே யாரும் செல்ல அனுமதி கிடையாது என்றார்.

No comments:

Post a Comment