Jul 31, 2013

சேலத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சேலத்தில் ரூ. 10.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பாக்கு போன்றப் பொருள்களை, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தி. அனுராதா, திங்கள்கிழமை பறிமுதல் செய்தார்.
 தமிழகத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு புகையிலை, போதை தரும் பாக்கு வகைகளுக்கு அரசு தடை விதித்தது. இதையடுத்து, சில்லரை வியாபாரிகள் அவற்றை விற்பனை செய்யக் கூடாது என்றும், விநியோகஸ்தர்கள், மொத்த வியாபாரிகள் உள்ளிட்டோர் தங்களிடம் உள்ள பொருள்களை ஜூன் 22-ஆம் தேதிக்குள் அழித்துவிட வேண்டும் என்றும் அவகாசம் வழங்கப்பட்டது.  அவகாசம் முடிந்த நிலையில், ஜூன் 22-ஆம் தேதியில் இருந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர். சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், கடை வீதி, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து புகையிலை, பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 அதேபோல, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் செவ்வாய்ப்பேட்டை, சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள முருகானந்தம் என்பவருக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் திங்கள்கிழமை சோதனை செய்தனர். '
அப்போது, அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள், போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, கிடைத்த தகவலின்படி, மாலை செவ்வாய் பேட்டை பிரதானச் சாலையில் மொத்த விற்பனையாளர் கிடங்கில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலையிலான அலுவலர்கள் சோதனை செய்தனர். இதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான புகையிலை, போதை பாக்குகள் போன்ற பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
 இதுகுறித்து அனுராதா கூறியது:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற பல்வேறு சோதனைகள் மூலம் சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களும், சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை காலை செவ்வாய்பேட்டையில் கிடங்கில் சோதனை செய்ததில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களும், மாலை நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 தடை செய்யப்பட்ட இந்தப் பொருள்களின் விற்பனை குறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த சோதனைகள் மேலும் தொடரும் என்றார் அவர்.

No comments:

Post a Comment