Jun 24, 2014

சேலம் அருகே சேகோ ஆலைக்கு சீல் வைப்பு - கிழங்கு மாவில் சாக்பீஸ் தூள் கலப்படம்

சேலம், ஜூன் 24&
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் அக்ரஹாரம் நாட்டார்மங்கலம் பகுதியில் ஸ்ரீஹரி சேகோ பேக்டரி என்ற தனியார் ஜவ்வரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஜவ்வரிசி தயாரிக்க தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான குழுவினர் இன்று ஸ்ரீஹரி சேகோ பேக்டரிக்கு சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலையில் ஜவ்வரிசி தயாரிக்க சோடியம் ஹைகோ புளோரைடு மற்றும் சல்பியூரிக் ஆசிட் ஆகியவற்றை பயன்படுத்துவது தெரியவந்தது. மேலும் உரிமம் இன்றி கடந்த 3 ஆண்டுகளாக ஆலை செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் ஆலையை பூட்டி சீல் வைத்தனர். ஆலையில் இருந்த தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் அழிக்கப்பட்டன. மேலும் ஆலையில் ஜவ்வரிசி தயாரிக்க மரவள்ளிகிழங்கு மாவு அரைக்கும் வசதி இல்லாததால், சேலத்தைச் சேர்ந்த ஜெகன், ஆத்தூரைச் சேர்ந்த ஜெகநாதன் ஆகிய புரோக்கர்களிடம் இருந்து அரைக்கப்பட்ட மரவள்ளி கிழங்கு மாவை வாங்கி ஜவ்வரிசி தயாரித்து வந்ததும், மரவள்ளி கிழங்கு மாவில் எடையை கூட்டுவதற்காக சாக்பீஸ் மாவு கலந்திருப்பதும் தெரியவந்தது. அதில் மக்காச்சோள மாவு கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் மாவின் மாதிரி எடுக்கப்பட்டு உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு சோத னைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத் தனர். அதன் முடிவு வந்த பின்னர் ஆலை ஓனர் மற்றும் மரவள்ளி கிழங்கு மாவு அரைத்துக்கொடுத்த புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் இயங்கி வந்த சேகோ ஆலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி, இதேபோல் ரசாயன பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததால் சீல் வைத் தனர். இதனால் நேற்று சேகோ ஆலை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு சீல் வைக்கப்பட்ட ஆலையை திறக்க அனுமதி வழங்கவேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஆலை உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment