May 29, 2014

ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

ஆத்துர்.மே.29சேலம்
மாவட்டம் ஆத்துர், தலைவாசல், கெங்கவல்லி பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் புஷ்பராஜ், சுந்தரராஜ், கோவிந்தராஜ், முனுசாமி, சிங்காரவேல் ஆகியோர் கொண்ட அலுவலர்கள் குழு ஆத்துர், தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மாம்பழங்கள் பழுக்க வைக்கும் முறைகளை ஆய்வு செய்தனர். கந்தக கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறதா அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்கை முறையில் ஏதேனும் வகையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா என பழக்கடை மற்றும் குடோன்களுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் வியாபாரிகளிடம் பழங்களை நல்லமுறையில் பழுக்க வைத்து விற்கவும் அறிவுரை வழங்கினார்கள். பின்னர் ஆத்துர் பேருந்து நிலையப்பகுதியில் உள்ள பீடாக்கடை மற்றும் உணவு விடுதிகளில் வைக்கப்பட்டு இருக்கும் குடிநீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர் பாட்டில்கள் முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தனர். பின்னர் பேருந்து நிலைய கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்களில் தயாரிப்பாளரின் முகவரி காலவதி தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தனர். சிலகடைகளில் முறைப்படியாக இல்லாத பொருட்களை பறிமுதல் செய்ததோடு இனி இதுபோல் நடக்க கூடாது என எச்சரிக்கை செய்ததோடு அடுத்த முறை இவ்வாறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
ஆத்துர் கோட்டை பகுதியில் உள்ள குடிநீர் நிரப்பும் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்யப்பட்டபோது அங்கு குடிநீர் நிரப்பப்பட்ட கேன்களில் உரிய பெயர் லேபிள் இல்லாததையடுத்து அந்த நிறுவனத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல் அங்கிருந்து எண்ணெய் கம்பெனி ஒன்றில் ஆய்வு செய்தபோது சரியான லேபிள் இல்லாமல் இருந்ததையடுத்து எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment