Oct 23, 2013

அனைத்து வகையான குளிர்பானங்களையும் சோதனை செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்



இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (எப்எஸ்எஸஏஐ), அனைத்து வகையான கரியமில வாயு கலந்த குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன்படி நாட்டு மக்களின் அடிப்படையான வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் இதை செய்ய வேண்டும் என நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
குளிர்பானங்களில் காணப்படும் தீங்கு விளைவிக்ககூடிய ரசாயனபொருள்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை ஒழுங்குபடுத்த தனியானதொரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டு தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் மேற்கண்டவாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 
"பொதுநல வழக்குகள் மையம்' என்ற தொண்டு நிறுவனமானது கடந்த 2004-ல் தொடர்ந்த வழக்கு விவரம்: குளிர்பானங்களில் உள்ள ரசாயன பொருள்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. அவற்றால் ஏற்படும் பாதிப்பைக் கண்டறிய எவ்வித சோதனையும் செய்யப்படுவதில்லை. குளிர்பானங்களில் அடங்கியுள்ள பொருள்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றில் அடங்கியுள்ள கூட்டுப் பொருள்களின் விவரத்தை பாட்டிலின் வெளியே ஒட்ட வேண்டும் என்று கேட்டிருந்தது. 
இந்த வழக்கில் ஆஜரான "பெப்சி' நிறுவன வழக்கறிஞர், பொதுநல மனுவை எதிர்த்ததோடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகள் போதுமானவையாக உள்ளதாகவும், அவை அனைத்தும் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார். 
மேலும், "கோலா' குளிர்பானங்களில் அடங்கியுள்ள பொருள்களின் விவரத்தை பாட்டிலின் மேல் ஒட்ட வேண்டும் என்றும், மக்களை திசை திருப்பும் வகையில் அந்த நிறுவனம் செய்து வரும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. 
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர் கூறியுள்ள புகார்கள் குறித்து மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைத்தது. மேலும், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த 2012 டிசம்பர் 13-ல் உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில், இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மதிப்பீடு குழுவின் ஆவணங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மேற்கூறிய உத்தரவை அளித்தனர்.

No comments:

Post a Comment