Jul 21, 2015

மதுபானங்களுக்கு தர நிர்ணய அறிக்கை

புதுடில்லி:'மதுபானங்களின் தர நிர்ணயத்தை பரிசோதிக்கும் வரைவு அறிக்கை, இன்னும், 45 நாட்களில் வெளியிடப்படும்' என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்துஉள்ளது. 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின் தயாரிப்பான,'மேகி நுாடுல்ஸ்'சில், காரீயம், ரசாயன உப்பு ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், இதை சாப்பிடு வோருக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சில பாக்கெட் உணவுப் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மற்ற பொருட்களின் மீதும், தன் பிடியை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., 
இறுக்கியுள்ளது. பீர், விஸ்கி, ரம் போன்ற மதுபானங்களின் தரத்தையும் பரிசோதிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுபான வகைகளின் தர நிர்ணயத்தை பரிசோதிக்கும் வகையிலான வரைவு அறிக்கையை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தயாரித்துள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 
இதுகுறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:மதுபானங்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் வரைவு அறிக்கை, அடுத்த, 45 நாட்களில் வெளியிடப்படும். 
அறிக்கை வெளியானதும், அதுகுறித்த தகவல் அனைத்து மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்படும். இதன் அடிப்படை யில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மதுபான வகைகளின் தர சோதனை குறித்து நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் உத்தரவிடலாம். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment