Jul 21, 2015

காய்கறிகளில் ரசாயன மருந்து தாக்கம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


கூடலுார்: விளைநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளில் ரசாயன மருந்துகளின் தாக்கம் எப்படி உள்ளது என்பது குறித்த ஆய்வை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டுஉள்ளனர்.காய்கறிகள் உற்பத்தியில் ரசாயன மருந்துகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ரசாயன மருந்துகள் தெளிக்காவிட்டால், காய்கறிகளை முழுமையாக உற்பத்தி செய்யவே முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால், இதனை பயன்படுத்தும் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை மறுக்க முடியாது.தமிழகப்பகுதியில் இருந்து வரும் காய்கறிகளில் ரசாயன மருந்துகளின் தாக்கம் அதிகம் உள்ளது என கேரளாவில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கேரளாவிற்கு கொண்டு வரும் காய்கறிகளுக்கு, அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியுள்ளது. மருந்து கலந்து வரும் காய்கறிகளை தடை செய்யவேண்டும் எனக் கூறிய கேரளா, தற்போது உணவு பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து பெற்ற லைசென்சு இருந்தால் மட்டுமே கேரளாவிற்குள் காய்கறிகளை அனுமதிக்க வேண்டும் என, எல்லைப்பகுதியில் உள்ள 'செக்போஸ்ட்' அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று முதல், ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வுக்காக எடுக்கப்படும் 'சாம்பிளை' மதுரையில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைப்பர். இதற்கான முடிவுகள் வருவதற்கு 15 நாட்கள் வரை ஆகும். விவசாய நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட காய்கறிகள், 15 நாட்கள் வரை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் வீணாகும் என்பதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
'மொபைல் லேப்' வேண்டும்: காய்கறிகளில் ரசாயன மருத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அதற்கான முடிவுகள் தெரியும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 'மொபைல் லேப்' அவசியம். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்கறிகளின் தன்மை குறித்து உடனடியாக தெரியும் வகையில் வசதியை விரைவில் 
ஏற்படுத்த அரசு முன் வரவேண்டும். இல்லாவிட்டால், காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்ப முடியாமல் சிக்கலை ஏற்படுத்தி விடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment