Dec 24, 2014

சேலத்தில் குடோனுக்கு சீல் மசாலா பொருட்களில் கலப்படம் 500 மூட்டை சோம்பு, சீரகம் பறிமுதல்


சேலம், டிச. 24:
சேலத்தில் சோம்பு, சீரகம், மிளகு ஆகிய மசாலா பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்து வந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 500 மூட்டை மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள மொத்த வியாபாரிகளின் குடோனில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த கிரீத் என்பவரின் குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. இவர் சோம்பு, கடுகு, சீரகம், மிளகு உள்ளிட்ட பொருட்களை குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து, பாலிஷ் செய்து, செவ்வாய்பேட்டையில் இருப்பு வைத்து விற்பனை செய்து வந்தார். செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது குடோனில் நேற்று அதிகாரிகள் நடத்திய சோதனையில், அனைத்து பொருட்களிலும் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சோம்பில் கூடுதல் நிறம் கிடைக்க பச்சை நிற ரசாயன பவுடரை கலந்து முதல் ரகம் போன்று விற்பனை செய்து வந்துள்ளார். மிளகில் பப்பாளி விதைகளை கலந்து கலப்படம் செய்து விற்பனை செய்துள்ளார். மேலும் சீரகம் மற்றும் கடுகில் அதே போன்று பொருட்களை கலந்திருப்பதும், வெந்தயத்தில் வெள்ளை நிற ரசாயன பவுடரை பயன்படுத்தி கூடுதல் நிறமேற்றியதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவரது குடோனில் இருந்த 500 மூட்டை சோம்பு, சீரகம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கலப்பட பொருட் களை விற்பனை செய்ததால், அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்.


இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், “ ரசாயன பொருட் களால் கலப்படம் செய்த உணவு பொருட்களை உட்கொண்டால், உடல் நலத்திற்கு பெரும் தீங்கு ஏற்படும். இங்கிருந்து சோம்பு, சீரகம் உள்ளிட்ட பொருட்கள் மாதிரி எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை அடிப்படையில், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment