Oct 10, 2014

பண்டிகை காலங்களில்உணவு பாதுகாப்பு துறை பதிவுபெற்ற நிறுவன பலகாரங்களை வாங்குங்கள் கலெக்டர் அறிவுறுத்தல்



தூத்துக்குடி, அக்.10:
பண்டிகை காலங்களில் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் பலகாரங்கள் வாங்குமாறு பொதுமக்களுக்கு கலெக்டர் ரவிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் அனைத்து விதமான விற்பனைகளும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவதுடன், உறவினர்களுக்கும் வழங்குவதுண்டு.
ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களால் சுகாதாரமாக தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
கலப்படமான பொருட்களையோ, அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.
பேக்கிங் உணவு பொருட்களின் விபரச்சீட்டில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெறஅறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்களும் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் வாங்குமாறும், பேக்கிங் பொருட்களில் விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பான புகார்களை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரிடம் 0461&2340699 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment