Jul 3, 2014

ஆற்காட்டில் அதிகாரிகள் அதிரடி காலாவதியான புகையிலை, உணவு பொருட்கள் பறிமுதல்





ஆற்காடு, ஜூலை 3:
ஆற்காட்டில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை நேற்று அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு பஸ் நிலையம், பஜார்வீதி உட்பட பல்வேறு இடங்களில் பெட்டிக் கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி சுகாதார பிரிவு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் பெட்டிக்கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவு பொருட்கள், தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள், குளிர்பான பாக்கெட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

No comments:

Post a Comment