Jun 4, 2014

கூடுவாஞ்சேரியில் 3 லட்சம் போதைபொருள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி



கூடுவாஞ்சேரி, ஜூன் 4:
கூடுவாஞ்சேரியில் தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரம் மளிகை கடை, பேன்சி ஸ்டோர், பெட்டி கடை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகநாதனுக்கு கலெக்டர் பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ரவிந்திரநாத், சுகுமாறன், கிளமண்ட்தேவபாலன், ஜோசப்செல்வராஜ்பெர்னான்டோ, ஜான்சிம்சோன் ஆகியோர் கொண்ட குழுவினர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு சில கடைகளில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.
இதில் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள ஒரு கடை மற்றும் குடோனில் ஹான்ஸ், குட்கா, பான்மசாலா, மாவா, சூப்பர்பாக், பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் போதை பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்புதுறை அலுவலர்களிடம் கேட்டதற்கு, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு 3 லட்சமாகும். மேலும் இந்த கடைகாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்கியுள்ளோம். தடை செய்யப்பட்ட போதை பொருட் களை பதுக்கி வைத்தாலோ, விற்றாலோ, இதேபோல் காலாவதியான பொருட் களை விற்பனை செய்தாலும் அந்தந்த கடைகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றனர்.

No comments:

Post a Comment