Feb 6, 2014

உணவு பாதுகாப்பு உரிமம் பெற அவகாசம்: வணிகர்களுக்கு நிம்மதி

சென்னை: உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற, பிப்., 4ம் தேதியுடன் கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு, மேலும், ஆறு மாதத்திற்கு அவகாசத்தை நீட்டித்துள்ளது. இது, நெருக்கடியில் இருந்த வணிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருள் கிடைக்க வழி செய்யும் வகையில், மத்திய அரசால், "உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் - 2006' கொண்டு வரப்பட்டது. விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 2011ல் அமலுக்கு வந்தது. இதன்படி, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்குள் 
வர்த்தகம் செய்வோர், 100 ரூபாய் செலுத்தி, உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுச் சான்றும்; அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர், 2,000 ரூபாய் செலுத்தி, உரிமமும் பெற வேண்டும். பதிவு, உரிமம் பெறாவிட்டால், 5 லட்சம் ரூபாய் வரை அபராதம், ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.ஆனால், "விதிமுறைகள் தற்காலத்திற்கு ஏற்ப இல்லை; திருத்தம் வேண்டும்' என, வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இரண்டு முறை அவகாசம் : தரப்பட்டாலும், பதிவுச்சான்று, உரிமம் பெற, வணிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.
தமிழகத்தில், 30 சதவீத வணிகர்கள் கூட, பதிவு உரிமம் பெறவில்லை. மத்திய அரசின் ஓராண்டு அவகாசம், பிப்.,4ம் தேதியுடன் முடிந்ததால், உணவு பாதுகாப்புத் துறையின் நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது.
"விதிகளில் திருத்தம் செய்யும் வரை, மேலும் கால அவகாசம் வேண்டும்' என, வணிகர்கள் 
வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இதற்கான அவகாசத்தை மேலும், ஆறு மாதத்திற்கு மத்திய 
அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, ஆக.,4ம் தேதிக்குள் பதிவுச் சான்று, உரிமம் பெற வேண்டும்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகி, வேல்சங்கர் கூறுகையில், ""இது நிச்சயம் வணிகர்களுக்கு ஆறுதல் தரும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வியாபாரிகளை மிரட்டும் 
செயல் தொடராது,'' என்றார்.அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட, வணிக சங்கங்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.

1 comment:

  1. Traders Associations should be clarified on the notifications issued by FSSAI extending time limit to repealed orders.

    ReplyDelete