Oct 2, 2013

ரூ.17.54 லட்சம் புகையிலைகடத்திய 2 லாரிகள் பறிமுதல்:லாரி டிரைவர்கள் கைது

மேட்டூர்: பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்திய, 17.54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையில் பாக்கெட்டுகளை மேச்சேரி போலீஸார் பறிமுதல் செய்து, இரு லாரியுடன் டிரைவர்களை கைது செய்தனர்.கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து மதுரைக்கு, இரு லாரிகளில் புகையிலை பாக்கெட்டுகள் கடத்துவதாக, மேச்சேரி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.நேற்று இரவு, மேச்சேரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீஸார் தொப்பூர் நெடுஞ்சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த, இரு லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது, ஒரு லாரியில், 8.80 லட்சம் ரூபாய், மற்றொரு லாரியில், 8.74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள், மதுரைக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது.புகையிலை பாக்கெட்டுகளுடன், இரு லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். புகையிலை கடத்திய மேச்சேரி அடுத்த, வெள்ளப்பம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர்கள் வெங்கடாசலபதி, 24, விஜயகுமார், 25 ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், வெள்ளப்பட்டி அருகிலுள்ள உப்பாரப்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மயில்சாமி, சுப்ரமணியன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment