Sep 25, 2013

சேலத்தில் பிரபல நிறுவனத்தின் பாட்டிலில் குளிர்பானம் அடைத்து விற்பனை தனியார் நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீசு

சேலம், செப்.25-சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் வி.எஸ்.என். என்ற பெயரில் குளிர்பானம் விற்க அனுமதி பெற்றுள்ளார். ஆனால், இவர் பிரபல நிறுவனத்தின் பெயரிலான பாட்டிலை வாங்கி அதில் போலியாக தங்களுடைய குளிர்பானங்களை அடைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று மாலை சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு அனுமதி பெற்றதற்கு மாறாக பிரபல நிறுவனத்தின் பெயரிலான பாட்டிலில் இந்த குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், அந்த கம்பெனி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அதிகாரிகள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீசு அளித்தனர். இதுகுறித்து அவர் 15 நாட்களுக்குள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 
மேலும் அதிகாரிகள் அங்கிருந்து ஆய்வுக்காக குளிர்பானம் மாதிரி எடுத்துச்சென்றனர்.

1 comment: