Sep 5, 2013

உணவு தரநிர்ணய ஆணையத்தின் சான்று பெறாத 9 குடிநீர் நிறுவனங்களுக்கு முன் எச்சரிக்கை நோட்டீசு 5 நாட்களுக்குள் மூட உத்தரவு

சேலம், செப்.5-சேலம் மாவட்டத்தில் உணவு தர நிர்ணய ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெறாத 9 குடிநீர் நிறுவனங்களுக்கு முன் எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் நிறுவனத்தை 5 நாட்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்ப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை நோட்டீசு
சேலம் மாவட்டத்தில் 33 குடிநீர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் 24 குடிநீர் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்று ஐ.எஸ்.ஐ. அங்கீகாரம் பெற்றுள்ளது. மீதமுள்ள குடிநீர் நிறுவனங்கள் மேற்கண்ட அனுமதி பெறாமல் ஹெர்பல் வாட்டர் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து உள்ளது.இந்த குடிநீர் நிறுவனங்களில் நெல்லிக்காய், வெட்டிவேர், ஜீரா, அதிமதுரம் போன்ற மூலிகைகளை கலந்து சுவையூட்டப்பட்ட நறுமண குடிநீர் என்ற பெயரில் பாட்டில்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் பதிவு செய்யப்படாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
9 குடிநீர் நிறுவனங்களுக்கு
அதன்படி சேலம் மாவட்டத்தில் 9 குடிநீர் ஆலைகளுக்கு முன் எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீசு பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:-பசுமை தீர்ப்பாயத்தின் படி சேலம் மாவட்டத்தில் உணவு தர நிர்ணய ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெறாத 9 குடிநீர் நிறுவனங்களுக்கு முன் எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீசு பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசு அனுப்பிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் இந்த நிறுவனங்களை மூட வேண்டும்.
சீல் வைக்கப்படும்
இல்லையென்றால் அதன் பிறகு அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த நிறுவனங்களுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும். குடிநீர் விற்பனை செய்ய கண்டிப்பாக உணவு தரநிர்ணய ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment