Aug 7, 2013

60 நாட்களில் கடைகளுக்கு உரிமம் ஆன்-லைன் பதிவு விறுவிறுப்பு

சேலம்: உணவு பாதுகாப்பு சட்டத்தில் ஜூலை, 1ம் தேதி முதல் கடைகளுக்கான உரிமம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 60 நாட்களில் கடைகளுக்கு உரிமம் அளிக்கப்படுவதால், "ஆன்-லைன்' பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஜூலை, 1ம் தேதி முதல் உணவு பாதுகாப்பு துறை மூலம் கடைகளுக்கான உரிமம், பதிவு புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை, "ஆன்-லைன்' மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில், சில வாரத்துக்கு முன், "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்வது சம்பந்தமாக, துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில், 28 ஆயிரத்து, 396 கடை, நிறுவனங்கள் உள்ளன. இதில், 16,582 கடை, நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தில் பதிவு, உரிமம் பெற்றுள்ளன. மீதம் உள்ள, 11 ஆயிரத்து, 814 கடை, நிறுவனங்கள் உரிமம் மற்றும் பதிவு புதுப்பிக்காமல் உள்ளன. அவற்றை, ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை, 50 கடை, நிறுவனங்கள், "ஆன்-லைன்' மூலம் உரிமம் வேண்டி விண்ணப்பித்துள்ளன. 25 கடைகள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து கடை, நிறுவனங்கள் பதிவு, உரிமம் பெறுதலுக்கான நடவடிக்கை ஜரூராக நடந்து வருகிறது. "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்தல், உரிமம் மற்றும் புதுப்பித்தல் பணிக்கு கடை, நிறுவன உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். "ஆன்-லைன்' மூலம் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு, 60 நாட்களில் பணியை முடித்து கொடுத்து விடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment