Sep 18, 2017

தடை செய்யப்பட்ட குட்கா விற்பது இல்லை: மளிகை ஷாப் வர்த்தக சங்கம் முடிவு

சேலம்: 'அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பது இல்லை' என, மளிகை ஷாப் வர்த்தக நலச்சங்க கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம், செவ்வாய்ப்பேட்டை மளிகை ஷாப் வர்த்தக நலச்சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் நடராஜன் தலைமையில், நேற்று நடந்தது. செயலாளர் தர்மலிங்கம், சேலம் அனைத்து வணிகர் சங்க பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வது இல்லை; தமிழகத்துக்கு தேவைப்படும் உளுந்து, துவரை, கடலை ஆகியவை, வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வரும் நிலையில், அதன் விலை உயர்வுக்கு, வியாபாரிகள் பொறுப்பேற்க முடியாது. டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் தடுக்க, குப்பையை மாநகராட்சியின் வாகனங்களில் மட்டுமே போட வேண்டும். செவ்வாய்ப்பேட்டை, கடைவீதி, முக்கோணம் சீனிவாசா பார்க் பகுதியில், மேம்பால பணி பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. அவற்றை விரைந்து முடித்து, கடைவீதிக்கு வரும் லாரிகள், வாகனங்கள் இடையூறு இன்றி வந்து செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுபவர், அதிக பாரம் ஏற்றுபவர், மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அதை விடுத்து, தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நிர்ப்பந்தித்து வழக்குப்பதிவு செய்யக்கூடாது என, போலீஸ் துறை, அரசை கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment