Jan 8, 2016

கலப்படப் புகார்: வெல்லக் கிடங்குகளில் சோதனை

சேலத்தில் கலப்படப் புகார் காரணமாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெல்லக் கிடங்குகளில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டு, வெல்ல விற்பனைக்குத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வெல்லம் விற்பனை சூடுபிடித்துள்ளனது.
இந்தநிலையில், சேலத்தில் தயார் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள வெல்லத்தில் கலப்படங்கள் இருப்பதாகவும், வெல்லத்தில் சர்க்கரை மற்றும் மைதா கலந்து விற்பதாகவும் புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா தலைமையிலானக் குழுவினர் செவ்வாய்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம் விற்பனை கிடங்குகளில் வியாழக்கிழமை காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெல்லத்தில் சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட வெல்ல மூட்டைகளும், நாட்டு சர்க்கரை மூட்டைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கலப்படம் செய்து தயாரிக்கப்பட்ட வெல்லம் மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை விற்பனை செய்வதற்கும் தடை விதித்தனர்.
மேலும், வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரைகளில் மாதிரிகளைச் சேகரித்து உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அதிகாரிகள் சோதனை நடத்திய 6 கிடங்குகளில் பகுப்பாய்வு அறிக்கை வரும் வரை கலப்பட வெல்லங்களை விற்பனை செய்யக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா கூறியது:
சேலத்தில் உள்ள வெல்லக் கிடங்குகளில் சர்க்கரை 80 சதவீத அளவுக்கும், கரும்பு பால் 20 சதவீத அளவுக்கும், கலர் பவுடர் மற்றும் மைதா மாவு கொண்டு தயாரிக்கப்பட்ட வெளிர் மஞ்சள் நிறமுடைய கலப்படமிக்க வெல்லம் விற்பதாகப் புகார் வந்தது.
அதன்பேரில், 6 கிடங்குகளில் சோதனை செய்துள்ளோம். கலப்படமிக்க வெளிர் மஞ்சள் நிறமுடைய வெல்லத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சோதனை முடியும் வரையில் வெல்லத்தை விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கலப்பட வெல்லம் அதிக சுவையுடன் இருக்கும்.
இதைப் பயன்படுத்தினால் உடலுக்கு கேடு வரும். நீரில் போட்டால் விரைவில் கரைந்துவிடும் தன்மை கொண்டது.
நுகர்வோர் அடர் பழுப்பு நிறத்தில் உள்ள கலப்படமில்லாத வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும். வெளிர் மஞ்சள் நிற வெல்லத்தை வாங்கக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment