Aug 21, 2015

உணவுப்பொருட்களில் நச்சு கண்டறிய தற்காலிக ஆய்வுக்கூடம் அமைத்த கேரளா

பாலக்காடு: வெளி மாநிலங்களிலிருந்து வரும் உணவு பொருட்களில், 'நச்சு இருக்கிறதா' என்று கண்டறிய, கேரள உணவு பாதுகாப்புத்துறையினர் அமைத்துள்ள தாற்காலிக ஆய்வுக்கூடம், வாளையார் மற்றும் மீனாட்சிபுரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது.
கேரளாவில், 28ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வெளி மாநிலங்களில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வருவது அதிகரித்துள்ளது. அவற்றில், 'நச்சு கலந்திருக்கிறதா' என்று ஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநில உணவுப் பாதுகாப்புத்துறையினர், எல்லையில் அமைந்துள்ள வாளையார், மீனாட்சிபுரம் சோதனைச்சாவடிகளில், தற்காலிக ஆய்வு கூடங்களை அமைத்துள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மீனாட்சிபுரம் வணிக வரி சோதனைச்சாவடியிலும், வாளையார் வணிக வரி சோதனைச்சாவடி அருகேயுள்ள வாடகை கட்டடத்திலும், தற்காலிக ஆய்வுக்கூடங்கள் நேற்று முன்தினம் முதல் செயல்பட துவங்கியுள்ளன. பால், பால் பொருட்கள், எண்ணெய் கொண்டு வந்த நான்கு வாகனங்களில் சோதனையிடப்பட்டது. அவற்றில் நச்சுத்தன்மை இல்லை என்பது தெரியவந்தது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான உணவு பொருட்கள் வருவதையொட்டி இந்த தற்காலிக ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
செப்.,1 வரை, இந்த ஆய்வு தொடரும். பால் பொருட்களை சோதனையிடும் பணியில், பால் பண்ணை மேம்பாட்டு துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நச்சுத்தன்மை கண்டுபிடித்தால் உணவு பொருட்களை திருப்பி அனுப்புவது மட்டுமல்லாமல் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காய்கறி, பழ வகைகளில் இருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை, சோதனை செய்வதற்காக, கோழிக்கோடு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உத்தரவை வாபஸ் பெற வேண்டும்
இது குறித்து கேரள தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் பேச்சிமுத்து கூறுகையில்,
''உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் பேரில், சோதனை சாவடிகளில் காய்கறி வாகனங்களை தேவையில்லாத சோதனைக்கு உட்படுத்துகின்றனர். விவசாயிகள், நுகர்வோர் பாதிக்கப் படுவதை தவிர்க்கும் வகையில், சோதனை உத்தரவை கேரள அரசு வாபஸ் பெற வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment