Nov 24, 2014

பிரபல கம்பெனிகள் பெயரில் போலி நெய் தயாரித்து விற்ற நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல்



சென்னை, நவ.22:
பிரபல கம்பெனிகள் பெயரில் போலி நெய் தயாரித்து விற்பனை செய்த நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை முழுதும் உள்ள கடைகளில், பிரபல கம்பெனிகள் பெயரில் ஒரிஜினல் ஊத்துக்குளி நெய் என்று கூறி போலியான நெய் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலநாட்களுக்கு முன்பு அண்ணாநகர் பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரிஜினல் நெய் போன்றே பிரபல கம்பெனிகளின் பெயரில் போலி நெய் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரிஜினல் நெய் கிலோ 300 ஆகும். ஆனால் இந்த போலி நெய் கிலோ 84க்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.
நெய்யை சோதனையிட்டபோது 10 சதவீதம் மட்டுமே நெய் இருப்பதும், மீதி 90 சதவீதம் வனஸ்பதி, சூரிய காந்தி எண்ணெய் மற்றும் ரசாயன பொடிகள் கலந்து விற்றது தெரிய வந்தது.
இவற்றை தி.நகர் கண்ணம்மாபேட்டை முத்துரங்கன் சாலையில் பாலசுப்ரமணியன் என்பவர் தயாரிப்பது தெரிந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு அங்கு திடீர் சோதனை மேற்கொண்டது.
அப்போது, அங்கு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ போலி நெய் பாட்டில்கள் 1,350 கிலோ கைப்பற்றப்பட்டன.
போலி வெண்ணெய் 105 கிலோ கைப்பற்றப்பட்டு தர ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து அந்நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

No comments:

Post a Comment