Aug 11, 2014

புகையிலையை தடை செய்ய முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம்


பெங்களூரு :புகையிலையை பல வடிவங்களில் பயன்படுத்துவதை, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு விதிமுறைகளின் கீழ், முழுமையாக தடை செய்யும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில், குட்காவை தடை செய்ததில் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதேநேரத்தில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வாசனை, இனிப்புடன் புகையிலை பொருட்கள் விற்கப்படுவது அதிகரித்துள்ளது. இவை, ஏழைகளை மிகவும் கவர்ந்துள்ளது.
புகையற்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், 90 சதவீதம் உடலுக்குள் புற்றுநோயை உண்டாக்குகிறது. புற்றுநோய் அதிகரிப்புக்கு புகையிலை பொருட்களே காரணமாக உள்ளது. உலகளவில், புகையிலை பொருட்களை பயன்படுத்தும் ஆண்கள் குறித்து நடத்திய ஆய்வில், 2010ல், இந்தியாவில் புகையில்லா புகையிலை பொருட்கள், சுவைக்கும் புகையிலை பொருட்கள் போன்றவைகள், 
இந்தியர்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
இதிலிருந்து, இந்தியாவில் புகையிலையை பல வகையில் பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு விதிமுறைகளின் கீழ், குட்கா, ஜர்தா மற்றும் பல வகை புகையிலை பொருட்களை மகாராஷ்டிர, மிசோரம், மணிப்பூர், தாதர் மற்றும் நகர் ஹாவேலி, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முழுமையாக தடை செய்துள்ளன.
புற்றுநோய் தடுப்பு திட்ட இயக்குனர், டாக்டர் விஷால் ராவ் என்னை சந்தித்தபோது, மற்ற மாநிலங்களை விட, கர்நாடகாவில், 28 சதவீதத்தினர் புகையிலையை பயன்படுத்துவதாகவும், 20 சதவீதத்தினர் பல வகையில் தயாரிக்கப்படும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாகவும், 8 சதவீதத்தினர், சிகரெட், பீடி போன்ற பொருட்களை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இது, உடல் நலனுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால், இந்த புகையிலை பொருட்களை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு, மத்திய அமைச்சர் ஷர்ஷ் வர்த்தன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment