Jul 12, 2014

சிக்கனில் நெளிந்த புழுக்கள்! அதிர்ச்சியில் கெஎஃப்சி பிரியர்கள்


உணவே மருந்து என்று இருந்த நமது உணவு பழக்கம், இப்போது 'உணவே விஷம்’ எனும் நிலையை எட்டிவிட்டது. இதன் சமீபத்திய அதிர்ச்சி, கெஎஃப்சி நிறுவனத்தின் மீது கூறப்பட்டுள்ள புகார். 
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கெஎஃப்சி கடையில் வாங்கப்பட்ட சிக்கனில் புழுக்கள் நெளிந்ததால், புழுக்களோடு உணவு பாதுகாப்பு அலுவலகத்தை எட்டியுள்ளது புகார். புழுக்களோடு இருந்த உணவை வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீளாமல், கோவை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் அளிக்கக் காத்திருந்த ரெட் ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த ஷகீல், அவரது நண்பர் யாசர் அராபத் ஆகியோரிடம் பேசினோம்.



''கடந்த 28-ம் தேதி மதியம் கோவை, ஆர்.எஸ்.புரத்தில் இருக்குற கெஎஃப்சி நிறுவனத்துக்கு நாங்க ரெண்டு பேரும் போனோம். அங்கே போய் ஆறு சிக்கன் பீஸ்களைக் கொண்ட ஒரு பக்கெட்டை ரூ.600-க்கு வாங்கி, வீட்டுக்கு வந்து சாப்பிடத் தொடங்கினோம். அப்போ சிக்கன்ல புழு ஒண்ணு இருந்ததைப் பாத்தோம். உடனடியா இது சம்பந்தமா கெஎஃப்சி-க்கு போன் பண்ணி சொன்னோம். அங்கே இருந்து ரெண்டு பேர் உடனடியா வந்தாங்க. 'ஆமா சார் புழு இருக்கு. 
உடனடியா உங்களுக்கு மாத்தி கொடுத்திடறோம்’னு சொன்னாங்க. ஆனா, நாங்க அதை ஏத்துக்கலை. உடனே கெஎஃப்சி-ல இருந்து மேனேஜர் உட்பட நாலு பேர் வந்தாங்க. 'பில் பணத்தை ரிட்டன் கொடுத்திடறோம். காம்ப்ரமைஸ் பேசிக்கலாம்’னு சொன்னாங்க. 
'அதெல்லாம் முடியாது. குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது?’னு கேட்டேன். அதுக்கு 'இவ்ளோதான் நாங்க செய்ய முடியும். அப்புறம் என்ன பண்றீங்களோ, 
பண்ணிக்கோங்க’னு சொன்னாங்க. நாங்க இப்போ உணவு பாதுகாப்பு அலுவலகத்துல புகார் கொடுத்திருக்கோம். இப்படி பண்ணா எப்படி? 160 டிகிரி வெப்பநிலையில் சிக்கனை வேக வைக்கிறதா சொல்றாங்க. அப்படீன்னா புழுக்கள் எப்படி வந்திருக்கும்? இது சம்பந்தமா விசாரிச்சு உரிய நடவடிக்கை எடுக்கணும்'' என்றார். 
புகாரைப் பெற்றுக்கொண்ட கோவை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தினர், புழுக்களோடு இருந்த சிக்கன் பீஸ்களை, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தனர். 
''இதுபோன்ற கடைகளில் கோழிக்கறியை பல நாட்கள் பதப்படுத்தி வைத்து நமக்குத் தருகிறார்கள். மீதமான இறைச்சியை மறுநாள், அதற்கு அடுத்த நாள் என பதப்படுத்தி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் புழு வருகிறது. எனவே, இதுபோன்ற உணவு வகைகளை விற்பதைத் தடுக்க வேண்டும்'' என்ற மருத்துவர்களின் குரலும் இந்தச் சம்பவத்தையொட்டி எழுந்துள்ளது.

கெஎஃப்சி-யில் விற்கப்படும் சிக்கனில் புழுக்கள் இருப்பது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட சில இடங்களில் இதேபோன்ற புகார்கள் எழுந்துள்ளன. திருவனந்தபுரத்தில் இதேபோன்று சிக்கனில் புழு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு புகார் செய்யப்பட்டது. புகார் அளித்த உடன் உடனடியாகக் கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள், மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, கடையை தற்காலிகமாகவும் மூடினர். ஆனால், அப்படி ஒரு நடவடிக்கை இங்கு எடுக்கப்படவில்லை. 
இது சம்பந்தமாக கோவை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அலுவலர்களிடம் பேசினோம். 'கெஎஃப்சி-ல சிக்கன் வாங்கினதாவும் அதுல புழுக்கள் இருந்ததாகவும் புகார் கொடுத்திருக்காங்க. சாம்பிளை டெஸ்ட்டுக்கு அனுப்பி வெச்சிருக்கோம். சீக்கிரம் முடிவு வந்திடும். முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சிக்கன் வாங்கி வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம்தான், புழு இருப்பதைப் பார்த்து, புகார் சொல்லி இருக்காங்க. அதனால, கடையை மூட முடியாது. கடையில சாப்பிட்டபோது புழு இருக்கறது தெரிஞ்சு புகார் சொல்லியிருந்தா, கடையை மூடி நடவடிக்கை எடுத்திருப்போம். இப்போ ஆய்வு முடிவு அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும்'' என்றார். 
இது தொடர்பாக டெல்லியில் உள்ள கெஎஃப்சி செய்தி தொடர்பாளர் விதீஷாவிடம் பேசினோம். ''சிக்கனில் புழு இருக்க வாய்ப்பே இல்லை. சிக்கனை ஃப்ரையரில் 171 டிகிரி செல்சியஸ், ஓவனில் 250 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வேக வைக்கிறோம். உணவுப் பாதுகாப்பு தரத்தை முறையாகப் பின்பற்றுகிறோம். எனவே, தவறு நடக்க வாய்ப்பே இல்லை'' என்றார். 
'உண்ணுவது எதுவோ... அதுவே நீ’ என சொலவடை உண்டு. நாம் என்னவாக இருக்கப்போகிறோம்?

No comments:

Post a Comment