Nov 13, 2013

தரமற்ற பொருட்கள் விற்பனை ஆய்வு செய்த அலுவலர்களுடன் வணிகர் சங்கத்தினர் வாக்குவாதம்

கிருஷ்ணகிரி: கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அலுவலர்கள், பறக்கும் படையினருடன், வணிகர் சங்க நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மளிகை கடைகள் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.கலைமணி, பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் கொண்ட குழுவினர், நேற்று காலை, ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விற்பனைக்காக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தரை தளத்தில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பொருட்களை பேக் செய்யும் முதல் தளத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிடாமலும், வண்டுகள் மற்றும் புழுக்கள் நெளிந்தவாறு இருந்த கோதுமை மாவு, ரவை ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இப்பொருட்கள் தரமற்றவை என்றும், சம்மந்தபட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்ப வைத்திருப்பதாக கடையில் பணிபுரிந்தவர்கள், அவர்களிடம் கூறினார்கள்.
இதையடுத்து கடையின், இரண்டாவது தளத்திற்கு சென்ற அலுவலர்கள் அங்கு சேதமடைந்த உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான கூல் டிரிங்ஸ் மற்றும் உணவு பண்டங்கள் ஆகியவை குவித்து வைக்கப்பட்டிருந்தை கண்டு அந்த பொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சம்பவ அங்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்க தலைவர் கேசவன் மற்றும் நிர்வாகிகள் வந்து காலாவதியான பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, திருப்பி அனுப்ப குடோனில் வைத்துள்ளதாகவும், அதனை விற்பனை செய்யவைக்கவில்லை என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பதற்காக இது போன்று ஆய்வு நடத்துவதாக கூறி சோதனையில் ஈடுபட்டிருந்த, அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலர்கள், தாங்கள் கலெக்டரின் உத்தரவு பேரில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து வணிகர் சங்க நிர்வாகிகள் அதிகாரிகளின் இது போன்று செயல்களை கண்டித்து முழு கடையடைப்பு நடத்தபோவதாக தெரிவித்தனர்.
இதனால் அங்கிருந்து ஐந்து ரவை சேம்பிள் பாக்கெட்டுகளை மட்டும் எடுத்து கொண்டு உணவு பாதுகாப்பு, பறக்கும்படை அலுவலர்கள் வெளியேறினார்கள்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ள வணிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment