Oct 31, 2013

இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

நாகை, அக்.31:
நாகை கலெக்டர் முனுசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ள நம் நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. முக்கியமாக தீபாவளி போன்ற பண்டி கை காலங்களில் விதவிதமான இனிப்பு பலகாரங் கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பது வழக்கம். தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஸ்வீட், பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிமான நிறமிகளையோ பயன்படுத்த கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச்சீட்டு வைக்கும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருட்களின் பெயர், தயாரிப்பு மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தோற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006ன்கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்று கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் இது தொடர்பான புகார்கள் ஏதாவது இருந்தால் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலரை, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் அலுவலகத்தை நேரிடையாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 04365 247060 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment