Sep 4, 2013

அனுமதியில்லாத ஹெர்பல் மற்றும் பிளேவர்டு குடிநீர் நிறுவனங்களை மூட அரசு உத்தரவு

மாநிலம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும், "ஹெர்பல்,பிளேவர்டு' குடிநீர் நிறுவனங்களை இழுத்து மூட, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. உணவுபாதுகாப்புத் துறை மூலம், "நோட்டீஸ்' வினியோகிக்கும் பணி துவங்கிஉள்ளது. தனியார் குடிநீர் நிறுவனங்களில் இருந்து, விற்பனைக்கு அனுப்பும் குடிநீர், தரமானது இல்லை என, தெரிய வந்ததால், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன் வந்து, வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறது. இதில், தமிழகம் முழுவதும், ஐ.எஸ்.ஐ., உரிமம் பெறாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள நிறுவனங்களில், குடிநீர் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க, பசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டு உள்ளது. இது தவிர, "ஹெர்பல், பிளேவர்டு' குடிநீர் என்ற பெயரில், மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதியின்றி, ஏராளமான குடிநீர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கடந்த முறை நடந்த விசாரணையின்போது, குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகள் எடுக்காதது குறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை, தீர்ப்பாயம் கண்டித்தது. அதனால், அனுமதியின்றி செயல்படும், "ஹெர்பல், பிளேவர்டு' குடிநீர் நிறுவனங்களை இழுத்து மூட, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை மூலம், இதற்கான
நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர்களுக்கு, இதுகுறித்த தகவல்கள், அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதன்படி, ஒரு வாரத்தில் மூட வேண்டும் என, "நோட்டீஸ்' வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியுள்ளது.
குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள், பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், அரசுஅதிரடி நடவடிக்கை எடுத்து ள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment