Jun 4, 2013

TNFS Dept. - Cuddalore Dist. News


 கடலூரில் விநியோகிக்கும் டேங்கர் லாரி குடிநீர் சுகாதாரமற்றது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கடலூர், ஜூன் 4:
கடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் வினியோகம் செய்யப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மாவட்டத்தின் தலைநகராக உள்ள கடலூரில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு அடிப்படை தேவையான குடிநீர் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யப்படுகிறது.
நாள்தோறும் 50 டேங்கர் லாரிகளில் சுமார் 2.5 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக கேப்பர் மலை பகுதிகளில் தனியார் போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பொதுமக்களும் டேங்கர் லாரிகளில் ஒரு குடம் நீரை 5 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து நகராட்சி சேர்மன் சுப்பிரமணியன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் நந்தகுமார், சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் நேற்று டேங்கர் லாரிகளை மடக்கி திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கேப்பர் மலை பகுதிகளில் உள்ள போர்வெல்களையும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜாவிடம் கேட்டபோது, தினந்தோறும் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தண்ணீர் பிளீச்சிங் பவுடர் போடாமல் கொண்டு செல்லக்கூடாது.
வாரம் ஒருமுறை இதுதொடர்பான அறிக்கை வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேப்பர் மலையில் உள்ள போர்வெல்கள் விவசாய பயன்பாட்டுக்கு இல்லாமல் குடிநீர் விற்பனைக்காக டேங்கர் லாரிகளில் ஏற்றிச்செல்வதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
கடலூர் நகரில் டிராக்டர்களில் குளோரின் கலக்காத குடிநீர் விற்பனை உணவு பாதுகாப்பு அதிகாரி கடும் எச்சரிக்கை
கடலூர்
கடலூர் நகரில் டிராக்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரில் குளோரின் கலக்காததை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து, டிராக்டர் டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
குடிநீர் வினியோகம்
கடலூர் நகரில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு நகராட்சி மூலம் நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் இது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாததால் கேப்பர்மலையில் இருந்து டிராக்டர் டேங்கர்களில் கொண்டு வரப்படும் குடிநீரை பேரல் ஒன்றுக்கு 30 ரூபாய் வீதம் மக்கள் வாங்கி பருகுகிறார்கள். இவ்விதம் நகரில் நாளொன்றுக்கு சுமார் 100 டிராக்டர் டேங்கர் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குடிநீரில் குளோரின் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காக நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் ராஜா, அதிகாரி நல்லதம்பி, நகர்நல அலுவலர் டாக்டர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் கேப்பர் மலையில் இருந்து குடிநீர் ஏற்றிக்கொண்டு வண்டிப்பாளையம் ரோட்டில் வந்த டிராக்டர்களை நிறுத்தி ‘குளோரோஸ்கோப்’ என்ற கருவி மூலம் குடிநீரை பரிசோதித்தனர். இந்த ஆய்வில் குடிநீரில் குளோரின் கலந்திராதது தெரியவந்தது. இதனால் டிராக்டர் டிரைவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசுகளை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா வழங்கினார்.
இது பற்றி அவர் கூறியதாவது:–
குளோரின் கலக்காமல்...
குடிநீர் மூலம் காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும். அதாவது ஆயிரம் லிட்டர் குடிநீரில் 5 கிராம் குளோரின் கலக்க வேண்டும், இதை விட குறைவாக குளோரின் கலந்தால் கிருமிகள் சாகாது, அளவுக்கு அதிகமாக கலந்தால் அதை குடிப்பவர்களுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு விடும். எனவே சரியான அளவில் குளோரின் கலக்க வேண்டும் என்று டிராக்டர் டிரைவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்,
இது பற்றி இன்றைக்கு(அதாவது நேற்று) ஆய்வு செய்ததில் டிராக்டர் டிரைவர்கள் குளோரின் கலக்காத குடிநீரை கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது, அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு கொடுத்திருக்கிறோம், இதே தவறை மீண்டும் செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறோம்.
இவ்வாறு டாக்டர் ராஜா கூறினார். 


டேங்கர் லாரிகளில் தரமற்ற குடிநீர் விநியோகம்: 50 லாரிகளுக்கு நோட்டீஸ்

கடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடலூர் நகரில் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு அடிப்படை தேவையான குடிநீர் டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 50 டேங்கர் லாரிகளில் சுமார் 2.5 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக கேப்பர் மலை பகுதிகளில் தனியார் போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பொதுமக்களும் டேங்கர் லாரிகளில் ஒரு குடம் நீரை 5 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் நந்தகுமார், சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் டேங்கர் லாரிகளை நிறுத்தி திங்கள்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் கேப்பர் மலை பகுதிகளில் உள்ள போர்வெல்களையும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜாவிடம் கேட்டபோது, தினந்தோறும் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தண்ணீர் பிளீச்சிங் பவுடர் போடாமல் கொண்டு செல்லக்கூடாது. வாரம் ஒருமுறை இதுதொடர்பான அறிக்கை வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது. கேப்பர் மலையில் உள்ள போர்வெல்கள் விவசாயப் பயன்பாட்டுக்கு இல்லாமல் குடிநீர் விற்பனைக்காக டேங்கர் லாரிகளில் ஏற்றிச் செல்வதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment