Jun 8, 2013

சாத்தூரில் தடையை மீறி விற்கப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்


சாத்தூர், ஜூன் 8:
சாத்தூரில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட பான்பராக், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி முதல் பான்பராக், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய மாநில அரசு தடை விதித்தது. இதையடுத்து அதிகாரிகள் கடைகளில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் கவிக்குமார் ஆலோசனையின் பேரில், சாத்தூரில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சாத்தூர் மெயின் ரோடு, ரயில்வே பீடர் சாலை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் தடையை மீறி விற்கப்பட்ட பான்பராக், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.5 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பான்பராக், குட்கா விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment