May 19, 2013

தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிப்பு

நங்கவள்ளி: தாரமங்கலம், ஜலகண்டாபுரம் பகுதியில், உணவு பாதுகாப்பு அலவலர்கள் அதிரடி சோதனை நடத்தி, தரமற்ற குளிர்பானங்களை கண்டுபிடித்து அழித்தனர்.
தாரமங்கலம், ஜலகண்டாபுரம் பகுதிகளில், தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை அதிகளவில் நடந்து வருவதாக, நேற்று முன்தினம், "காலைக்கதிர்' நாளிதழில், படத்துடன், விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், சிவானந்தம், மாரியப்பன், ராஜ்குமார் ஆகியோர், நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் பகுதிகளில், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, நங்கவள்ளியில், போலியான மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்து, குப்பையில் கொட்டி அழித்தனர். ஜலகண்டாபுரத்தில், ஐந்து இடங்களில், கலப்பட டீத்தூள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்தனர்.
கடைகளில், பான்பராக், குட்கா விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்தனர். குளிர்பானக்கடைகள், பேக்கரிகளில், ஈ மொய்க்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்கள் பேக்கிங் செய்து விற்பனை செய்தால், பாக்கட்டுகள் மீது காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடரப்படும் என எச்சரித்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி சோதனையால், நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் பகுதிகளில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment