Apr 12, 2013

சுகாதார துறைக்கு அதிகாரத்தை மாற்றுவதில்...தாமதம்!இறைச்சி கடைகளை ஒழுங்குபடுத்துவதில் சிக்கல்

சென்னை:உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளுக்கு உரிமம் வழங்கல், நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், வருவாய் துறையிடம் இருந்து, சுகாதார துறைக்கு மாற்றப்படும் என, அறிவிக்கப் பட்டு நான்கு மாதங்களாகியும், மாநகராட்சி இன்னும் நடைமுறைப் படுத்தாததால், சுகாதாரமற்ற இறைச்சி, உணவு விற்பனை தொடர்கிறது.
அதிகார மாற்றம்:வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு சுகாதாரமற்ற இறைச்சி வரத்து அதிகரித்த நிலையில், அதை தடுக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டது.தொடர்ந்து, இறைச்சி விற்பனை கடைகள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. சுகாதார துறையினர் ஆய்வு செய்த போது, கால்வாயோரம், சாலையோரங்களில் எந்த சுகாதார ஏற்பாடும் இல்லாமல், இறைச்சி கடைகள் இருந்தன.
மாநகராட்சியில், இதுபோன்ற கடைகளுக்கு சுகாதார துறை தான் உரிமம் வழங்க வேண்டும். 2007ம் ஆண்டில், இந்த நடைமுறையை மாநகராட்சி மாற்றி, வருவாய் துறையிடம் அளித்ததால், சுகாதார துறையினரின் ஆய்வு இல்லாமலேயே, பணம் செலுத்தப்பட்ட உடன், உரிமம் வழங்கப்பட்டது.சுகாதாரமற்ற நிலை குறித்து, வருவாய் துறைக்கு சுகாதார துறை தகவல் மட்டுமே தெரிவிக்க வேண்டிய சூழலும், நேரடி நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிர்வாக சிக்கலும் இதனால் ஏற்பட்டது.
ஒற்றை சாளர முறை:இதுகுறித்து, "தினமலர்' நாளிதழில் செய்திகள் வெளியாயின. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம், மாநகராட்சி கூட்டத்தில், அறிவிப்பு வெளி யிட்ட மேயர் சைதை துரைசாமி, ""உணவகம், சிற்றுண்டி சாலை, டீ கடை, இறைச்சி கடைகளுக்கு உரிமம் வழங்குதல், நடவடிக்கை எடுத்தல் எல்லாம் இனி, ஒற்றை சாளர முறையில் மேற்கொள்ளப் படும்,'' என்றார்.
மேலும், ""வருவாய் துறையிடம் உள்ள அனுமதி வழங்கல், நடவடிக்கை எடுத்தல் அதிகாரங்கள் இனி, சுகாதார துறைக்கு மாற்றப்படும். சென்னை ஐகோர்ட்டின் வழிகாட்டுதல் நடைமுறைகள் பின்பற்றப்படும்,'' என்றும், அவர் தெரிவித்தார்.
தொடரும் சிக்கல்:இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும், இதுவரை உரிமம் வழங்கும் நடைமுறையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இதனால், உணவகம், இறைச்சி கடைகளுக்கும், சுகாதார துறையின் கள ஆய்வு இன்றியே உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்வதால், சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை, உணவு விற்பனை கடைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் உள்ளது.கடந்த ஆண்டில், அதிக அளவில் வெளிமாநிலங்களில் இருந்து சுகாதாரமற்ற ஆடு, மாட்டிறைச்சி, ரயில்கள் மூலம் சென்னைக்கு வந்தன.தற்போதும் அதே நிலை தொடர வாய்ப்புள்ளது. இதனால், சுகாதார பிரச்னை பெரிதாக வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""உரிமம் வழங்கும் நடைமுறை சுகாதார துறையிடம் இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதுகுறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அரசின் முறையான அனுமதி கிடைத்ததும், உரிமம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும். சிக்கல்கள் விரைவில் தீரும்,'' என்றார்.

No comments:

Post a Comment