Dec 24, 2012

உணவு பாதுகாப்பு சட்டத்தில் சமரசம் கிடையாது:கமிஷனர் குமார் ஜெயந்த் உறுதி

கோவை : ""உணவுப்பொருள் உற்பத்தியில் அடிப்படை சுகாதார வசதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டத்தில், எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை,'' என, உணவு பாதுகாப்பு கமிஷனர் குமார் ஜெயந்த் பேசினார்.
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம், தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை மற்றம் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் குறித்த கருத்தரங்கு, நேற்று கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ஓட்டல்கள் உட்பட உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு , "உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் - 2006'ன் கீழ் உரிமம் பெறுதல், பதிவு செய்தல் உள்ளிட்ட அணுகுவசதிகள் அளிப்பது குறித்து, கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
கலெக்டர் கருணாகரன் பேசுகையில், ""உணவுப் பொருட்களில் சுகாதார முறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை 75 சதவீதம் பேர் உணர்ந்தவர்களாக இல்லை.
கோவையில் தரமற்ற உணவு விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன் வளர்ப்பு பண்ணைகள் மீதும், கலப்பட தேயிலை விற்பனை செய்த நபர்கள் மீதும் சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
உணவு பாதுகாப்பு கமிஷனர் குமார் ஜெயந்த் பேசியதாவது:
சர்வதேச ஏற்றுமதியாளர்கள் முதல் சாதாரண டீக்கடை வைத்துள்ளவர்கள் வரை உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட வரம்புக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாம் உண்ணும் உணவு சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது என பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் சட்டம் அமைந்துள்ளது.
ஓட்டல்களில் சமைப்பதற்கும், தூய்மை செய்வதற்கும் பயன்படுத்தும் தண்ணீரை அருகருகில் வைக்கக் கூடாது. மீதமாகும் உணவை மீண்டும் பயன்பாட்டுக்கு எடுக்கக்கூடாது. சைவம் மற்றும் அசைவ உணவுகளை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும். சுத்தமான, சுகாதாரமான குடிநீரை நீங்கள் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
சட்டம் குறித்து அச்சம் தேவை இல்லை. அதே நேரத்தில், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், சில்லரை வியாபாரம் செய்வோர் என அனைத்து தரப்பினரும் சுகாதார முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதில், எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை.
இவ்வாறு, உணவு பாதுகாப்பு கமிஷனர் குமார் ஜெயந்த் பேசினார்.
"கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், "அன்னபூர்ணா ஓட்டல்' நிர்வாக இயக்குனர் சீனிவாசன், "சுகுணா பவுல்ட்ரி' நிர்வாக இயக்குனர் சுந்தரராஜன், நடமாடும் உணவு வர்த்தகர்கள் சங்க தலைவர் கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுவரை 20,000 லைசென்ஸ்
தமிழக உணவு பாதுகாப்பு கூடுதல் கமிஷனர் டாக்டர் ஜெயகுமார் பேசுகையில், ""முதலில் இருந்த சட்டத்தின்படி, உணவுப் பொருட்களில் கலப்படம் தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய உணவு பாதுகாப்பு சட்டம், உணவின் தரத்தை நுகர்வோருக்கு உறுதி அளிக்கும் விதத்தில் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் பதிவு செய்தல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 1.56
லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 20 ஆயிரம் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.

1 comment: