Dec 13, 2019

இனிமே பானி பூரி சாப்பிடும் போதெல்லாம் இதுதான் ஞாபகம் வரும்!

காலில் மிதித்து பானி பூரி தயாரித்து, திருச்சி முழுவதும் அதை சப்ளை செய்த நிறுவனத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இனிமே பானி பூரி சாப்பிடும் போதெல்லாம் இதுதான் ஞாபகம் வரும்!
திருச்சி சஞ்சீவி நகர் மேல தேவதானம் பகுதியில், வடநாட்டினர் பானி பூரி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அந்தப் பகுதியில் உள்ள ஐந்து வீடுகளை வாடகைக்கு எடுத்து இயங்கி வருகிறது. 
இந்த பானி பூரி நிறுவனத்தை, வடமாநிலத்தைச் சேர்ந்த கமல்சிங், ராஜு ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில், வடமாநிலங்களைச் சேர்ந்த 20 பேர் தங்கி, பானி பூரிகளைத் தயாரிக்க பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 
இந்த நிறுவனம் குறித்து திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்குச் சமீப நாட்களாகப் புகார்கள் வந்துள்ளன. அந்த புகாரில், “சுகாதாரமற்ற முறையில், காலில் மிதித்துப் பூரி மாவைத் தயாரிக்கிறார்கள்” எனக் கூறப்பட்டிருந்தது. 
புகாரையடுத்து, இந்த பானிபுரி நிறுவனம் செயல்பட்டு வந்த வீடுகளில், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். 

சோதனையின்போது, சுகாதாமின்றி, தரமற்ற முறையில் பானி பூரிகளைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் பானிபூரிகள் தயாரிக்கப்பட்ட இடத்தில், தரைகளில் ஆங்காங்கே ஓட்டைகளும், அதிக எண்ணிக்கையில் எலிகளும் சென்று வந்து கொண்டிருந்தன. மற்றொரு அறையில் அதிகாரிகள் சோதனை செய்யச் சென்றபோது, அங்கு நடந்த நிகழ்வைப் பார்த்து அதிர்ந்து போனர். 
ஆம், ஒரு அறையில் பானிபூரி தயார் செய்ய மாவைச் சிலர் கால்களால் மிதித்துத் தயாரித்து வந்தனர். இதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல் அந்த இடம் சுகாதாரமற்ற முறையிலிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 
இதற்கிடையில், திருச்சியில் உள்ள 90 சதவீத பானிபூரி கடைகளுக்கு இந்த நிறுவனத்தில் கால்களால் தயாரிக்கப்படும் பானிபூரிதான் செல்கிறது என்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment