Mar 15, 2019

``ஸ்விக்கி, உபர்ல லன்ச் புக் பண்ணி அனுப்பாதீங்க'' - அதிர வைத்த சென்னை பள்ளியின் இமெயில்


வீட்டு வாசலில் வேன் வந்து நிற்க, லன்ச் பாக்ஸில் சாப்பாட்டை அவசரம் அவசரமாக திணிக்கும் பெற்றோரைப் பார்க்க முடியும். வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளி என்றால், அம்மாவே நேரில் சென்று, பிள்ளைகளுக்கு ஊட்டி விடும் அம்மாக்களையும் பார்க்க முடியும். இப்போது புதிய முறையில் பிள்ளைகளுக்கு லன்ச் அனுப்பும் வழக்கம் தொடங்கியுள்ளது. ஸ்விக்கி, உபர் போன்ற ஆன் லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பெற்றோர் ஆர்டர் செய்ய, அவர்கள் பள்ளிகளில் டெலிவரி செய்யும் பழக்கம் உருவாகியுள்ளது. இதனால், சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில், உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு உணவு அனுப்பக் கூடாது என்று தெரிவித்துள்ளது. 


இது குறித்து கேட்க, அந்தப் பள்ளியைத் தொடர்புகொண்டபோது, ``எங்கள் பள்ளிக்கு யாரும் இதுவரை ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து குழந்தைகளுக்கு அனுப்பவில்லை. ஆனால், பெற்றோர்கள் பலரும் அதுபோல ஆர்டர் பண்ணலாமா என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி உணவு அனுப்புவதை நாங்கள் ஏற்பதில்லை. அதனால்தான் எல்லாப் பெற்றோர்களுக்கும் இமெயில் அனுப்பியுள்ளோம்" என்றனர். 
குழந்தையின் வளர்ச்சியில் உணவே பிரதானம். அதைப் பெற்றோர் சமைத்துக் கொடுக்கும்போது முழு ஆரோக்கியமாகக் கிடைக்கும். அதே உணவகங்களில் ஆர்டர் செய்வது வீட்டில் தயாரிக்கும் அளவு இருக்குமா என்பது சந்தேகமே! அதனால், குழந்தையின் உடல் ஆரோக்கியம் சீர் கெடவும் வாய்ப்பிருக்கிறது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் தொடராதிருக்கட்டும்.

1 comment: