Feb 24, 2018

``உணவு என விற்பனை செய்யப்படுபவை பெரும்பாலும் விஷங்களே!’’ - மருத்துவர் கு.சிவராமன்

இன்று நாம் மிகப் பெரிய வணிக வன்முறையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் சாப்பிடும், உங்கள் தட்டில் பரிமாறப்படும், கடைகளில் தேடிப்பிடித்துச் சாப்பிடும் அத்தனை உணவுகளும் எப்படிப் பயிராக்கப்படுகின்றன... எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன... எப்படிப் பக்குவப்படுத்தப்படுகின்றன... எப்படிப் பரிமாறப்படுகின்றன... என அனைத்துப் படிநிலைகளையும் ஆராயவேண்டியிருக்கிறது. அப்படி ஆராய்ந்தால், இவை அனைத்திலும் வணிக வன்முறை தலைத்தூக்கி நிற்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
அண்மையில் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் `சேவ் ஃபுட்ஸ் ஃபெஸ்டிவல்’ (Save Foods Festival) என்ற விழா நடந்தது. அதில்
சித்த மருத்துவர் கு.சிவராமன் பங்கேற்று உரையாற்றினார்... தன் உரைக்கு அவர் மையப் பொருளாக எடுத்துக்கொண்டது இந்தப் பிரச்னையைத்தான். `எல்லாவற்றையும் வணிகமாக்கிவிட்ட இன்றைய நவீன உலகம் உணவையும் விட்டுவைக்கவில்லை’ என்ற நிதர்சனமான உண்மையை விரிவாகப் பேசினார் சிவராமன்... ``ஒரு காலத்தில் தொற்றுநோய்கள்தான் நமக்கு ஆபத்தானவையாக, உயிர்கொல்லியாக இருந்திருக்கின்றன. குறிப்பாக, இந்தியா சுதந்திரமடைந்த நாள்களில் அதாவது 1947-க்குப் பிந்தைய காலத்தில் காலரா, காசநோய், பிளேக் போன்ற தொற்றுநோய்களின் தாக்கம்தான் இங்கே அதிகமாக இருந்தது. இன்றைய மருத்துவ உலகம் இவற்றையெல்லாம் வெகுவாகக் குறைத்துவிட்டது. ஆனாலும், தொற்றுநோய்கள் அல்லாத பிற வாழ்வியல் நோய்களான சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், உளவியல் நோய்கள் போன்றவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கின்றன. இதற்கு, நம் குடும்பத்திலேயே நிச்சயம் ஓர் உதாரணம் இருக்கும். மாறுபட்டுப்போன நமது உணவுப் பழக்கமும், அதைத் தனது சந்தைப்படுத்துதலின் மூலம் சாதித்துக்கொண்டிருக்கும் வணிகர்களும்தான் இதற்கான காரணம்’’ என்றவர், நம் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
``வியாபாரமயமாகிப் போன இன்றைய உணவும், உணவுக்கான விலையும் சாமானியர்களை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இந்த வியாபாரம் எங்கிருந்து தொடங்கியது?’’
``இது இன்று நேற்றல்ல... விவசாயம் என்றைக்கு விவசாயத் தொழில் நிறுவனங்களாக உருமாறியதோ, அன்றைக்கே உணவு வியாபாரமும் தொடங்கிவிட்டது. விளைவித்தவனுக்கும், உணவை உண்பவனுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இன்றைய வணிகத்துக்குப் பெரிய சந்தையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இவர்களுக்கு இடையிலிருக்கும் வணிகர் மட்டுமே இதில் கொள்ளை லாபம் பார்க்கக்கூடியவராக இருக்கிறார். இதில் லாபம் வாடிக்கையாளருக்கும் இல்லை, உற்பத்தி செய்பவருக்கும் இல்லை. இதன் விளைவாகத்தான் நாம் இன்று நோய்களையும், விவசாயிகளின் தற்கொலைகளையும் சந்தித்துவருகிறோம். விவசாயிக்கு வருமானம் இல்லை, வாடிக்கையாளருக்கு சத்தான உணவு இல்லை. இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், நியாயமான வர்த்தக நடைமுறையைக் (Fair trade practice) கொண்டுவர வேண்டும். இதனால் மட்டுமே உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் நியாயமான பகிர்தலை உருவாக்க முடியும்.’’
``சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பர்ய உணவு உண்பதை ஓர் அவமானமாகப் பார்க்கிறார்கள். மேலைநாட்டு உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகிறார்கள். மற்ற நாடுகளின் தட்பவெப்பநிலைக்கு உகந்த அந்த உணவுகள் நம் நாட்டு தட்பவெப்பநிலைக்கு உகந்ததாக இருக்குமா?’’
``உணவை நிச்சயம் உலகமயமாக்க முடியாது. ஜெர்மனியில் ஓடும் காரை இந்தியாவில் ஓடச் செய்யலாம். ஆனால், ஜெர்மனியில் சாப்பிடும் உணவை இந்தியாவில் உண்ண முடியாது. ஒருவரின் உணவுப் பழக்கம், அவர் வசிக்கும் தட்பவெப்ப நிலையையும், அவருடைய மரபணுவையும், அவர் செய்யும் தொழிலையும், அவரின் மனதையும் சார்ந்தது. இத்தாலியில் இருக்கும் பீட்சாவை நாம் சாப்பிடுவது, நம் மரபணுவுக்குப் பரிச்சயமில்லாத ரசாயனக் கலவையை உட்கொள்வது போன்றது. இந்த உணவுப் பழக்கம் வேறுவிதமாக வினையாற்றி, புதுப் புது நோய்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.’’
``இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறை மிகவும் குறைந்துவிட்டது. இன்றைய அவசர உலகில், காலை உணவைத் தவிர்ப்பது, `குப்பை உணவுகள்’ என்று குறிப்பிடப்படும் உணவுகளைச் சாப்பிடுவதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்?’’
``நம்முடைய மருத்துவத்தின்படி காலை உணவு மிக முக்கியமான ஒன்று. இன்று பலரும் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு ஓட்ஸ் கஞ்சியைக் குடிக்கிறார்கள். உண்மையில் ஓட்ஸ் என்பதை குதிரைகளுக்குத்தான் கொடுப்பார்கள். இன்று `ஓட்ஸ்’ என்ற பெயரில் அவல் போன்று விற்கப்படுபவை, பல ரசாயனக் கலவைகளைக் கொண்டு பயிரிடப்பட்டு, பல்வேறு மாறுதல்களுக்குப் பிறகு வெறும் சக்கையாக மட்டுமே சந்தைக்குக் கொண்டுவரப்படுன்றன. இந்தியாவில் இருக்கும் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம் போன்றவைதான் சிறந்த காலை உணவாக இருக்க முடியும். இவை தவிர இட்லி, தோசை, கம்மங்கூழ், தினைப் பொங்கல் போன்றவற்றையும் நாம் காலை உணவாகச் சாப்பிடலாம். இவற்றைச் சாப்பிட முடியவில்லையென்றால், வாழைப்பழம், கொய்யாப்பழம், பப்பாளிப்பழம் அல்லது கைக்குத்தல் அவல் போன்றவை சிறந்த காலை உணவுகள்.’’
``இந்தியாவில் இளம் பெண்களை அதிகமாக அச்சுறுத்தும் நோய்கள் எவை?’’
``நான் மருத்துவக் கல்லூரியில் படித்த நாள்களில், `மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரலாம்?’ என்ற கேள்வி எழும்போதெல்லாம், திருமணம் ஆகாத, பால் புகட்டாத மகளிருக்கு முதுமையில்தான் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நினைத்தோம். இந்த வருடக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பரவலாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோய் 30 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களைத் தாக்கக்கூடியதாக மாறியிருக்கிறது. இளம் பெண்களைத் தாக்கும் மற்றொரு நோய் சினைப்பை நீர்க்கட்டிகள் (Polycystic ovarian disease). முன்பெல்லாம் இந்தக் கட்டிகள் யதேச்சையாக அல்ட்ரா ஸ்கேன் (Ultra scan) மூலம் கண்டறியப்பட்டன. ஆனால், இன்று பத்தில் இரண்டு பெண்களுக்கு இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கட்டிகள் மூலம் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுவதோடு கருத்தரிப்பும் தள்ளிப்போகும் அபாயமும் இருக்கிறது. இதனால் பெண்கள் மனம், சமூகம், பொருளாதாரம்... என எல்லாவற்றாலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.’’
``நீங்கள் சொல்லும் `உணவே மருந்து’ என்ற கருத்து மக்கள் மத்தியில் தவறாகப் பொருள்கொள்ளப்படுகிறதே... `உணவு’ என்ற பெயரில் நாம் இன்று உண்பதெல்லாம் உணவுதானா... நீங்கள் `உணவே மருந்து’ என்னும் பெயரில் குறிப்பிடுவது எதை?’’
``இன்று உணவு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுபவை பெரும்பாலும் விஷங்கள்தான்! நாம் இங்கு உணவு என்று சொல்வது நமது மரபு சார்ந்த உணவுகளை. நாம் பாரம்பர்யமாக விளைவித்துவரும் உணவுப் பொருள்கள்தான், அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு.’’
``இன்று தூக்கம் முதல் பசி வரை எல்லாவற்றுக்கும் மருந்து, மாத்திரைகள் பெருகி வருவதுபோல், சமீபத்தில் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதற்கான காரணம் என்ன... இதற்கு சித்த மருத்துவம் கூறும் தீர்வு என்ன?’’
`` `மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.’
- இதுதான் சித்தமருத்துவம் கூறும் அடிப்படைக் கருத்து. நாம் சாப்பிட்ட உணவு முழுமையாக ஜீரணித்து முற்றிலுமாக உட்கிரகிக்கப்பட்ட பிறகு, அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். இதைத்தான் சித்த மருத்துவம் `பசித்துப் புசி’ என்கிறது. ஆனால், இன்று பசி எடுக்காமலேயே பசி எடுக்க ஒரு மாத்திரை, உண்ட உணவைச் செரிக்கவைக்க ஒரு மாத்திரைஎன்று உட்கொள்ளும்போது அது நோயைக் கூட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் இன்றைய சமூகம் மருந்துகளுக்கு அடிமையாகிக்கிடக்கிறது.’’
உணவு என்ற பெயரில் நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மிகப்பெரிய சந்தையும், அதனால் நாம் சந்திக்கப்போகும் பின்விளைவுகளும், நினைப்பதைவிட மிகக் கொடியதாக இருக்கும் என்பதை மிக அழகாகச் சொன்னார் மருத்துவர் சிவராமன். அதற்கு அவர் மேற்கோள் காட்டிய வரி... ``இந்த ஒரு தலைமுறைதான் தன் அடுத்த தலைமுறையின் மரணத்தை அருகிலிருந்து பார்க்கப் போகும் தலைமுறை.’’
``அப்படி கடைசி தலைமுறை ஆகாமல் இருக்க வேண்டுமென்றால், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட, நம் நாட்டில் பாரம்பர்ய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உண்பதுதான் சிறந்த வழி’’ அழுத்தமாகச் சொல்கிறார் சிவராமன்.

No comments:

Post a Comment