Nov 10, 2017

வேலூர் அருகே காலாவதியான ரூ.4 கோடி உணவு பொருட்கள் சிக்கின-நிறுவனத்துக்கு ‘சீல்’

வேலூர் அருகே பிரபல நிறுவனத்தின் வினியோகஸ்தர் காலாவதியான உணவு பொருட்களுக்கு புதிய தேதியிட்டு கடைகளுக்கு வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ரூ.4 கோடி மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நிறுவனத்துக்கும் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
வேலூர், 
வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ரவமணி. இவருக்கு சொந்தமான குடோன் போன்ற பெரிய கட்டிடம் ஒன்று வேலூரை அடுத்த செதுவாலை அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை ரவிச்சந்திரன் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இங்கிருந்து அவர் ‘தஞ்சாரா’ நிறுவனத்தின் தயாரிப்புகளான சமையல் மசாலா பொருட்கள், காபி பவுடர், அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, ஊறுகாய், அப்பளம், குலோப்ஜாமூன், உப்பு, குழந்தைகளுக்கான லேஸ் தின்பண்டங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்களை வேலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்துவந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரவிச்சந்திரன் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் உரிமையாளருக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கட்டிட உரிமையாளர் ரவமணி தனது கட்டிடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்குநடக்கும் தொழில்மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் “தனக்கு வாடகை பாக்கி தராதது உள்பட அங்கு சட்டத்துக்கு புறம்பாக ஏதோ நடப்பதாக தெரிகிறது. எனவே சம்பவ இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறி கலெக்டரிடம் மனுகொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தில் உள்ள உணவு பொருட்களை சோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து நேற்று மாலை வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கவுரிசுந்தர், கொளஞ்சி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் தங்களுடன் போலீசாரையும் அழைத்து சென்றுள்ளனர். அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டனர். 4 பேர் மட்டும் இருந்தனர். அவர்களை அதிகாரிகள் பிடித்துக்கொண்டனர்.
பின்னர் அந்த கட்டிடத்துக்குள் சென்று பார்த்தபோது கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளம் முழுவதும் ‘தஞ்சாரா’ நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள் அட்டைப்பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் இருந்தன. அவைகளை பிரித்து அதில் இருந்த பொருட்களை ஆய்வுசெய்தபோது அனைத்து பொருட்களும் காலாவதியானது என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்த பொருட்களின் பாக்கெட்டுகளில் உள்ள காலாவதியான தேதியை ரசாயனம் மூலம் அழித்துவிட்டு, மிஷின் மூலம் புதிய தேதி அச்சிட்டும், புழு, வண்டுகள் இருக்கும் பொருட்களின் பாக்கெட்டுகளை பிரித்து அதில் இருக்கும் பொருட்களை மிஷின் ஜல்லடைமூலம் சலித்து மீண்டும் அதை பாக்கெட்டுகளில் அடைத்து, அதில் புதிய தேதி அச்சிட்டு கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது. இது கடந்தசில ஆண்டுகளாக நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதற்காக அங்கு எந்திரங்கள் நிறுவப்பட்டு பெரிய தொழிற்சாலை போன்று இயங்கி வந்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வேலூர் உதவி கலெக்டர் செல்வராஜ், ஆம்பூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு தனராஜன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நிறுவனத்தை பார்வையிட்டனர். அங்கிருக்கும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த கட்டிடத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதுகுறித்து உணவுபாதுகாப்பு அலுவலர் கவுரிசுந்தர் பள்ளிகொண்டா போலீசில் புகார்செய்தார். அதில் தஞ்சாரா நிறுவனத்தின் தயாரிப்புகளை ரவிச்சந்திரன் விற்று வந்தார். அந்த நிறுவனத்தின் காலாவதியான உணவுப்பொருட்களின் பாக்கெட்டில் தேதியை ரசாயனம் மூலம் அழித்து விட்டு புதிய தேதியை நவீன எந்திரம் மூலம் அச்சடித்து வினியோகித்து வந்துள்ளார்’ என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலையை நடத்திவந்த ரவிச்சந்திரன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

No comments:

Post a Comment