Aug 28, 2017

'ஈ' மொய்க்கும் தின்பண்டங்களால் 'தீங்கு' உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு அவசியம்

விருதுநகர்;விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தின்பண்டங்களை சாப்பிடுவதால் மாணவர்களை நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் காசு கொடுப்பதும், இடைவேளை நேரத்தில், பள்ளி முடிந்ததும் அருகே உள்ள கடைகளில் விற்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். முன்பு பள்ளி அருகே உள்ள பெட்டிகடைகளில் நெல்லிக்காய், கொய்யா, மாங்காய், நாவல் பழம், இலந்தை பழம், பனங்கிழங்கு, பனியாரம், ஆரஞ்சு, கடலை மிட்டாய் என ஏதாவது ஒரு சத்தான தின்பண்டங்களை மாணவர்கள் வாங்கி சாப்பிடுவர். தரமானதாக, சுவையாக இருந்ததால் மாணவர்கள் போட்டி போட்டு வாங்கி சாப்பிட்டு உடல்நலத்தோடு இருந்தனர்.
லாபம் ஒன்றே குறிக்கோள்இன்று லாப நோக்கை மட்டும் கொண்ட வியாபாரிகளால், கிராமங்களில் உள்ள பெட்டிகடைகளில், அதிலும் அரசுப்பள்ளிகள் அருகே உள்ள பெட்டிகடைகளில் தான் தரமற்ற சாக்லெட்டுகள், மிக்ஸர், சிப்ஸ், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஜூஸ், வறுக்கப்பட்ட பொருட்கள், செயற்கை முறையில் கலரூட்டப்பட்ட, பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள் விற்கப்படுகிறது.
சில கடைக்காரர்கள் காலாவதியான மிட்டாய் மற்றும் தின்பண்டங்களை காசாக்கும் நோக்கில் மனிதாபிமானமற்ற நிலையில் பள்ளி அருகே விற்று காசாக்குகின்றனர். மாணவர்கள் தங்கள் பிறந்தநாளுக்கு சாக்லெட் மற்றும் இனிப்புகள் வழங்குகின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் இனிப்புகளில் செயற்கையாக கலரூட்டப்பட்டவை தான் இருக்கின்றன.
போலிகள்
கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரை வித்தியாசம் தெரியாமல் மாற்றி, அதே பெயரில் பேக் செய்து போலி தின்பண்டங்கள் விற்பனை செய்வதும் சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இவ்வாறு போலியாக விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கும், நல்ல தின்பண்டங்களுக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தைகள் போலியை சாப்பிடுகின்றனர்.
இதுபோன்ற போலி மற்றும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை சாப்பிடும் குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் தாக்குகிறது.
மாணவர்கள் பாதிப்பு
ஆரம்பப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது, பள்ளி அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்பனை செய்யக் கூடாது என சட்டம் கூறுகிறது. இதை பள்ளிகள் மற்றும் கடைக்காரர்கள் உட்பட யாரும் கடைபிடிப்பதில்லை. இதனால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
அவித்த உணவு
மணிகண்டன், சைல்டு லைன், “அரசுப் பள்ளிகள் அருகே ஈ மொய்க்கும் தின்பண்டங்களை விற்கும் கடைகள் பல உள்ளன. இதை பள்ளி ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் முதல் பள்ளி ஆசிரியர்கள் வரை யாரும் கண்டுகொள்வதில்லை. இதற்கு ஒரே தீர்வு, இயற்கை விவசாயத்தில் விளைந்த சத்தான பழங்கள், திணை வகைகள், பயறு வகைகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அவித்த உணவுகளான பனியாரம், புட்டு போன்றவற்றை கடைகளில் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களின் உடல்நிலையை சீரழிக்கும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்கும் பெட்டிகடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment