Aug 1, 2017

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது

தர்மபுரியில் வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பல கடைகளில் மறைத்து வைக்கப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார்.
இதன்படி தர்மபுரி டவுன் போலீசார் தர்மபுரி நகரில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அஞ்சகார தெருவில் உள்ள ஒரு பழைய வீட்டில் பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
நேற்று போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட போதை பாக்குகள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. இவை தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்வதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை பதுக்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தர்மபுரி டவுன் போலீசார், இதில் தொடர்புடைய தர்மபுரியை சேர்ந்த லோகாந்தன்(வயது 43), அஸ்கர்அலி(31) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment