Jun 13, 2016

நவீன இறைச்சி கூடத்துக்கு பூட்டு: உணவு பாதுகாப்பு அலுவலர் கெடு

மேட்டூர்: 'மேட்டூர் நகராட்சி நவீன இறைச்சி கூடத்தை, வரும், 15ம் தேதிக்குள் திறக்க ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்காவிடில், சீல் வைக்கப்படும்' என, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார்.
மேட்டூர் நகராட்சியில் கடந்த, 2007-08ல், 20 லட்சம் ரூபாய் செலவில் நவீன ஆடு வெட்டும் கூடம் கட்டப்பட்டது. வியாபாரிகள் இந்த கூடத்தில் ஆடுகளை வெட்டி, இறைச்சியை மட்டும் கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். மேட்டூர் நகராட்சி சார்பில் நவீன ஆடு வெட்டும் கூடத்தில் வைத்து ஆடுகளை வெட்டுவோரிடம் கட்டணம் வசூல் செய்யும் உரிமம் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் ஆடு வெட்டும் கூடத்தை பூட்டி வைத்துள்ளதால், மேட்டூர் நகராட்சியில், வியாபாரிகள் பலர் சாலையோரம் ஆடுகளை வெட்டி விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மேட்டூர் நகராட்சி நவீன இறைச்சி வெட்டும் கூடத்தை ஆய்வு செய்த, சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: வியாபாரிகள் சாலையோரம் ஆடுகளை வெட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பூட்டி கிடக்கும் ஆடு வெட்டும் கூடத்தை, வரும், 15ம் தேதிக்குள் திறக்க ஒப்பந்ததாரருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் மேட்டூர் நகராட்சிக்கு நோட்டீஸ் கொடுப்பது மட்டுமின்றி, ஆடு வெட்டும் கூடமும் பூட்டி சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment