Feb 24, 2016

மக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவதே வியாபாரிகளின் முக்கியக் கடமை:ஆட்சியர்

மக்களுக்கு பாதுகாப்பானதும், தரமானதுமான உணவுப் பொருள்களை வழங்குவதே வியாபாரிகளின் முக்கியக் கடமை என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை பேசினார்.
ராமநாதபுரத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் பாதுகாப்பான உணவு, தயாரிப்பு, விற்பனை, நுகர்வு ஆகியன குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் எம்.ஜெகதீஷ்சந்திர போஸ் வரவேற்றார். பால், தேயிலை, பழங்கள் இவற்றில் எவ்வாறு கலப்படம் செய்யப்படுகிறது என்ற கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது: உணவு வணிகத்தில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் கலப்படமில்லாத உணவுப் பொருள்களை வழங்குவதே முக்கியக் கடமையாகும். வியாபாரிகளிடையே பாதுகாப்பான உணவுப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தரமான உணவை மக்களுக்கு வழங்கிட முன் வர வேண்டும். நுகர்வோரால் வாங்கப்படும் பொருள்கள் எவ்வித சுகாதாரக் கேடும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுகிறது என்பதை உறுதி செய்வதற்காகவே இது தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்றார்.
கருத்தரங்கில், வர்த்தக சங்க மாவட்டத் தலைவர் பா.ஜெகதீசன், குப்தா கோவிந்தராஜன், ஜபருல்லாகான், ஞா.காசி, நுகர்வோர் சங்கத் தலைவர் கே.ஜே.மாதவன், தன்னார்வ ரத்ததான ஒருங்கிணைப்பாளர் வேணு.சதீஷ்குமார் ஆகியோர் உள்பட வியாபாரிகள், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், உணவுப் பொருளில் எவ்வாறு கலப்படம் செய்யப்படுகிறது என்ற குறும்படமும் திரையிட்டுக் காட்டப்பட்டது.

No comments:

Post a Comment