Nov 11, 2015

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை



பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம் இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு அதிக தண்ணீர் செலவிடப்படுவதால் எதிர்காலத்தில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதால் இதய நோய், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதை இப்போது உறுதி செய்துள்ள உலக சுகாதார நிறுவனம், சிவப்பு இறைச்சியை உண்பதால் குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று எச்சரித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த புற்றுநோயாளிகளில் 19 சதவீதம் பேர் புகையிலைப் பழக்கத்தாலும் 3 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுவதாலும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் இறைச்சி உண்ணும் பழக்கம் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் வெளிநாடுகளை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. சீனாவில் ஒருவர் ஆண்டுக்கு 10 கிலோ கோழி இறைச்சி சாப்பிடுகிறார். இது இந்தியாவைவிட 10 மடங்கு அதிகம். இதேபோல மாட்டிறைச்சி உண்பதிலும் சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளைவிட இந்தியா மிகவும் பின்தங்கியே உள்ளது.
இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதும் மிகவும் குறைவாகும். பெரும்பாலும் கோழி இறைச்சிதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு
இந்தியாவைப் பொறுத்தவரை இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைவிட இறைச்சி ஏற்றுமதியால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது.
உலகளாவிய அளவில் இறைச்சி ஏற்றுமதிமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. பொதுவாக இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு அதிக தண்ணீர் செலவிடப்படுகிறது.
ஒரு கிலோ இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதிக்கு தயார் செய்ய சுமார் 16 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதேநேரம் ஒரு கிலோ காய்கறிகளை பதப்படுத்தி தயார் செய்ய 320 லிட்டர் தண்ணீர் இருந்தால் போதுமானது.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தனிநபருக்கான தண்ணீர் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மடிகின்றன.
இந்நிலையில் இறைச்சி பதப்படுத்துதலுக்காக அதிக தண்ணீரை செலவிட்டால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புஇதுதவிர இறைச்சி பதப்படுத்துதலால் சுற்றுச்சூழலும் அதிகம் பாதிக்கப்படுகிறது. உலகளாவிய அளவில் கால்நடைகளால் 18 சதவீதம் பசுமைக்குடில் வாயு வெளியாகிறது.
மாட்டிறைச்சி உற்பத்திக்கு இதர கால்நடைகளை விட 28 மடங்கு கூடுதலாக நிலம் தேவைப்படுகிறது. இதனால் பெரும்பாலான நாடுகளில் மாட்டிறைச்சிக்கு பதிலாக காய்கறி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்திய மாட்டுப் பண்ணைகளில் இப்போது அதிக அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாவின் பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய பாக்டீரியாவால் இந்தியாவில் ஆண்டுதோறும் 58 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
இது ஓர் அபாய எச்சரிக்கை ஆகும்.

No comments:

Post a Comment