Dec 27, 2014

நடைபாதை சிற்றுண்டி கடைகளின் விதிமுறை நடைமுறைக்கு வருமா? மக்கள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர், டிச.27:
சாலைகளில் உணவு விற்பனை செய்வோருக்கான தூய்மை மற்றும் சுகாதார தேவைகள் குறித்து, புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகள், தற்போது நடைமுறையில் இல்லை. பெரும் பாலான தள்ளுவண்டி கடைகள், சாக்கடை ஓரத்தில் ஈ மொய்க்கும் இடத்தில் தான் உள்ளன.
திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உட்பட பல்வேறு பகுதிகளில், 2000க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளன. மாலை 5 மணிக்கு துவங்கும் வர்த்தகம், இரவு 10 மணி வரை நடக்கிறது.
சாதாரண டிபன் உணவுகள், பஜ்ஜி, போண்டா, வடை முதல் வடமாநில உணவு வகைகள், பாஸ்ட் புட் உணவுகள் என வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சாலை யோரத்தில் இயங்கும் இந்த நடைபாதை கடைகளில், அடிப்படை சுகாதாரம் என்பது பெரும்பாலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
திறந்தவெளி சாக்கடை ஓடும் துர்நாற்ற சூழலில், பல தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு பக்கெட்டில் நிரப்பப்பட்ட தண்ணீரில், பாத்திரங்களை மீண்டும், மீண்டும் மூழ்க வைத்து, சுத்தம் செய்யப்படுகிறது.
சில கடைகளில் மறு சுழற்சி அடிப்படையில், சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்ப தில்லை.
ஆனால், அவசரப் பசியை போக்குவதால், எத்தகைய சுகாதார சூழலிலும் வியாபாரம் களை கட்டி வருவது தான் ஆச்சரியத்துக்குரிய விஷயம். இது குறித்து அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்களும் வருமானம் கருதி எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, மக்களின் சுகாதாரம் பாதிக்கும் வகை யில் இயங்கும் தள்ளு வண்டிக் கடைகளை, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment