Nov 11, 2014

நல்ல கறி... எப்படி வாங்குவது?

சென்னை ரயில்களில் வந்த அந்தப் பெட்டிகளைப் பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள். முடை நாற்றம் எடுக்க... அழுகிய நிலையில் இருந்தது இறைச்சி. அடுத்தடுத்த நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சரக்கு ரயில் பெட்டிகளைச் சோதித்தபோது மேலும் பல பெட்டிகள் சிக்கின. இப்படிக் கைப்பற்றப்பட்ட இறைச்சியின் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா? ஒன்றரை டன். எங்கிருந்து வருகிறது இந்த இறைச்சி என்பதுகுறித்து அதிகாரிகளுக்கு இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், அது எங்கே போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது... உங்களுடைய வயிறு! 
ஆமாம். தமிழகத்தில் ஆட்டிறைச்சியின் விலை 400 ரூபாயைத் தாண்டிவிட்டது. வெளி மாநிலங்களில் இருந்து அது 200 ரூபாய்க்குள் கிடைத்தால் லாபம்தானே? இந்த லாப வெறிதான் சாலையோர உணவகங்களில் இருந்து பெரிய உணவு நிறுவனங்கள் வரை இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான, சுகாதாரமற்ற இறைச்சியை வாங்க வைக்கிறது.



''வெளிமாநிலங்களில் இருந்து வரும் இறைச்சியைத் தினமும் சோதனை செய்ய முடியாது. திடீர் சோதனை நடத்தி கெட்டுப்போன இறைச்சிகளைக் கைப்பற்றி அழிக்கிறோம். இதுபோன்ற இறைச்சியை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்று அசைவ உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சென்னையைப் பொறுத்த அளவில் தினமும் 1,650-க்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு, சுகாதாரமான முறையில் வெட்டப்படுகின்றன. இவற்றின் இறைச்சி விற்கப்படுவதற்குத் தகுதியானவை எனச் சான்றிதழை நாங்கள் அளிக்கிறோம். மக்கள் நம்பகமான கடைகளில் இறைச்சியை வாங்குவது நல்லது'' என்று சொல்கிறார் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர். 
இறைச்சி சாப்பிடும்போது நம்மை நாமே எப்படி பாதுகாத்துக்கொள்ளவது என்பதுகுறித்து பொதுநலம் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர் கே.விவேகானந்தனிடம் கேட்டோம்.

'பொதுவாக, ஆட்டுத்தொட்டியில் வெட்டப்படும் இறைச்சியை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பதப்படுத்தாமல் வைத்திருந்தால், இறைச்சி அழுக ஆரம்பித்துவிடும். குளிர்பதனப் பெட்டிகளில் மைனஸ் 15 முதல் மைனஸ் 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இறைச்சியை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். பொதுவாக, ஆடு மாடு உடலில் கிளாடீரியம், ஸ்டப்லா காகஸ், எக்கினோ காகஸ், ஈகோலி, ஆஸ்காரிஸ் போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஆடு மாடு இறந்ததும் இவை அதிக அளவில் பல்கிப் பெருகி அதைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன. இதனால், இறைச்சி அழுக ஆரம்பிக்கிறது. மேலும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படலாம்.
எனவே, கால்நடைகளை வெட்டிய அடுத்த சில மணி நேரங்களில் சமைத்துச் சாப்பிடுவதுதான் நோய்க் கிருமிகளைத் தவிர்க்க ஒரே வழி. கெட்டுப்போன இறைச்சியில் உள்ள கிருமிகள் மனித உடலுக்குள் செல்லும்போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ரத்தக் குழாய்கள் வழியே சென்று மூளையைப் பாதிக்கும். ஹைடாடிட் என்ற ஒட்டுண்ணியானது கல்லீரலுக்குச் சென்று அங்கு கட்டியை உருவாக்கும். நுரையீரலை அடையும் கிருமிகள் சுவாசப் பிரச்னை, இடைவிடாத இருமல், சளி போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். தசைகளில் தங்கும் கிருமிகள் தீராத வலியை ஏற்படுத்தும். இதுதவிர, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் ஏற்படலாம். பாதுகாப்பு இல்லாத இறைச்சியை ஈக்கள் மொய்க்கும்போது காலரா போன்ற நோய்கள் ஏற்படும்'' என்றார்.
கறிக் குழம்பைக் காரசாரமாக வைப்பதும் சாப்பிடுவதும் மட்டும் கலை அல்ல; நல்ல கறியாகப் பார்த்து வாங்குவதும் கலைதான். என்ன சொல்கிறீர்கள்?
பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது? ஆறு விஷயங்களைக் கவனியுங்கள் என்கிறார் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் இனாயதுல்லா.
கவனிக்க வேண்டிய ஆறு விஷயங்கள்
1. நீங்கள் செல்லும் இறைச்சிக் கடை தினந்தோறும் திறக்கக் கூடியதா?
2. அந்தக் கடைக்கு அரசு உரிமம் உள்ளதா?
3. கடையில் சுத்தமான சூழல் உள்ளதா?
4. இறைச்சி பக்கத்தில் நிற்கும்போது மொஞ்சை (கவுச்சி) வாடை அடிக்கக் கூடாது.
5. இறைச்சி நிறம் மிகவும் சிவப்பாகவோ, மிக அதிகம் வெளுத்துப்போயோ இருக்கக் கூடாது. இறைச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
6. கறியைத் தொட்டுப் பார்த்தால் ஜில் என இருக்கக் கூடாது. அப்படி 'ஜில்’ என இருந்தால் அது குளிர்பதனப் பெட்டியில் வைத்த முந்தைய நாள் இறைச்சியாக இருக்கலாம்.

No comments:

Post a Comment