Jun 3, 2014

மக்களிடையே குறைந்து வருகிறது மாம்பழ ஆர்வம் கார்பைடு கற்கள் பயன்பாடு எதிரொலி

கோவை, ஜூன் 3:
கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை தொடர்ந்து உண்டால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளதால், மக்களிடையே மாம்பழம் சாப்பிடும் ஆர்வம் குறைந்து வருகிறது.
முக்கனிகளில் ஒன்றாக மாம்பழம் விளங்குகிறது. தமிழகத்தில் சேலம், ராஜபாளையம், பெரியகுளம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் மா சாகுபடி அதிகளவில் உள்ளது. மாம்பழத்தில் மல்கோவா, பங்கனபள்ளி, அல்போன்சா, கிளிமூக்கு, பாம்பே கிரீன், நீலம், பாதாமி, மல்லிகா, ராஸ்புரி, செந்தூரன், கேசர் உள்ளிட்ட ரகங்கள் உள்ளன. மாம்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதால், மக்களிடைய விரும்பி சாப்பிடும் பழமாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரை சீசன் என்பதால், தற்போது மாம்பழ விற்பனை நடந்து வருகிறது.
மாம்பழத்தில் அன்டி&ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் எதிர்த்து போராடுவதிலும், சரும சுருக்கத்தை நீக்குவதிலும் சிறந்ததாக விளங்குகிறது. மேலும், மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ளதால், தெளிவான கண் பார்வைக்கு ஏற்றது. மாழ்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், இதயம் மற்றும் ரத்தகுழாய்களில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதை தடுத்து, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது. மாம்பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. இதுபோன்று எண்ணற்ற மருத்துவ குணங்கள் அனைத்தும், இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் மூலம் கிடைக்கிறது.
மாம்பழத்தினை வைக்கோல் போர் மூலம் இயற்கையாக பழுக்க வைக்க 10 முதல் 15 நாட்கள் பிடிக்கும். ஆனால், வியாபார நோக்குடன், தற்போது மாம்பழத்தினை கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இம்முறைக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் போதுமானது. க்ஷ
இதனால், மாம்பழத்தில் இயற்கையாக உள்ள மருத்துவ குணங்கள் அனைத்தும் அழிந்து, உடலுக்கு கேடு விளை விக்கும் பொருளாக மாறுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.
கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் என, பார்த்தவுடன் அறிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், உடல் நலன் கருதி பொதுமக்களிடைய மாம்பழம் சாப்பிடும் ஆர்வம் குறைந்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “கால்சியம் கார்பைடு கற்களில் இருந்து வெளிவரும் அசிட்டிலீன் வாயு, மாங்காய்களில் பழுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது.
இதனை தொடர்ந்து உண்பதால், வயிற்றுபோக்கு, வாந்தி, தீராத தலைவலி, மயக்கம், அல்சர் போன்ற நோய்கள் ஏற்படும். தொடர்ந்து, சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும்.“ என்றனர்.

No comments:

Post a Comment