Mar 28, 2014

8.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 28: 
கிருஷ்ணகிரி மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு பிரிவு) டாக்டர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜசேகர், மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்ஐக்கள் ரவீந்திரன், ராமதாஸ், ஏட்டுகள் பிரபு, செந்தில்குமார் ஆகியோர் கிருஷ்ணகிரி & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி ஆற்று பாலம் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அவ்வழியே வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 45 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் சுரேஷ் என்பவரிடமிருந்து ஈரோட்டில் உள்ள சத்தீஷ்குமார் என்பவருக்கு, சேலம் மாவட்டம் செம்மாண்டப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுனரான கார்த்திக் (28), கிளீனர் ரங்கநாதன் (23) ஆகியோர் மூலம் எடுத்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாவட்ட கலெக்டர் ராஜேஷ் பார்வையிட்டு, இதன் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ன் கீழ் நடவடிக்கை எடுக்கவும், பொருட்கள் அனைத்தையும் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைத்து சீல் வைக்கவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment