Feb 2, 2014

கலப்பட எண்ணெய்களால் உடல்நலம் பாதிப்பு: சுகாதார துறையினர் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


சென்னிமலை: 'கலப்பட எண்ணெய்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து, கலப்பட எண்ணெய் உற்பத்தியை தடை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ரசாயனம்:
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் எராளமான எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவை, பல கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணெய் உற்பத்தியில், கண்காணிப்பு இன்றி ஏராளமான கலப்பட எண்ணெய் உற்பத்தியாகிறது. இந்த எண்ணெய் நாடு முழுவதும், விற்பனை செய்வதால், மக்கள் உடல் நலம் பாதிப்புக்கு ஆளாகின்றனர். காங்கேயம் பகுதியில் தயாராகும், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயில், சல்பர் என்ற கொடிய ரசாயனம் கலக்கப்படுகிறது. இங்கு சல்பர் இல்லாமல், தேங்காய் எண்ணெய் உற்பத்தி இல்லை என்றே கூறலாம். தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு, முதலில் தேங்காயை உடைத்து, உலர் களத்தில் காய வைப்பர். தேங்காய் பருப்பில் பூஞ்சை வராமல் தடுக்க, தேங்காய் பருப்பை ஓரிடத்தில், மலைபோல் குவித்து, தார்பாய் மூடி, கொடிய ரசாயனமான சல்பரை, ஒரு இரும்பு சட்டியில் போட்டு அதன் அடியில் வைத்து, நெருப்பு இட்டு புகைக்க செய்வர்.
உடலுக்கு தீங்கு:
இப்புகை தேங்காய் முழுவதும் பரவி, தேங்காயின் மேற்பரப்பில், பனிபோல் வெள்ளை நிறத்தில் ஒட்டி, பூஞ்சை வராமல் தடுக்கும். ஐந்து நாளில் உலர வேண்டிய பருப்பு, இரண்டு நாளில் காய்ந்து, தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் பதத்துக்கு வந்துவிடும். இந்த சல்பர் கலந்த தேங்காய் பருப்பில் இருந்து, எண்ணெய் எடுத்து, விற்கின்றனர். தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் சல்பர் (கந்தகம்) உடலுக்கு தீங்கானது. சல்பர் கலந்த தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தினால், முடி உதிரும். புற்று நோய், நரம்பு மண்டல பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதற்கு ஒரு உதாரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிகிச்சைக்கு செல்வோரில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்தோர் அதிகம். இங்கு, சில நல்ல உற்பத்தி நிறுவனங்கள், சல்பர் கலப்படம் செய்யாமல், சுத்தமான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தயாரித்து விற்பனை செய்தாலும், சல்பர் கலந்த எண்ணெய் விற்பனையே அதிகம். இதனால், சில நிறுவன எண்ணெய் பட்டியலில், 'சல்பர் கலக்காத தேங்காய் எண்ணெய், உடலுக்கு கேடு விளைவிக்காதது' என, கூறி விளம்பரம் செய்கின்றனர். மாம்பழம் பழுக்க வைக்க கார்பைடு கல் பயன்படுத்துவதை தடுக்க, சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுப்பதுபோல, இவற்றையும் ஆய்வு செய்து, அந்நிறுவன உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும்.

1 comment:

  1. மக்கள் நலன் கருதி உடன் நடவடிக்கை தேவை

    ReplyDelete